உலகிற்கு உதவும் பாரதம்

உக்ரைனுக்கும் உலகின் பிற நாடுகளுக்கும் பாரதம் தொடர்ந்து அளித்து வரும் உதவிகள் குறித்து ஐ.நா பாதுகாப்பு அவையில், ஐ.நாவுக்கான பாரதத்தின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் விளக்கம் அளித்தார். அப்போது, “உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டிற்கு இதுவரை 11 முறை மருந்து உள்ளிட்ட உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் உதவிகள் தேவைப்படுவதாக உக்ரைன் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, அந்நாடு கோரிய குறிப்பிட்ட வகையான மருந்துகள், ஆழமான காயங்களுக்கு கட்டு போட பயன்படும் ஹீமோஸ்டேட்டிக் பேண்டேஜ் போன்றவற்றை அனுப்பிவைக்க பாரதம் தயாராக உள்ளது” என தெரிவித்தார். மேலும், “உலகின் பல நாடுகளுக்கு பாரதம் கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளது. கொரோனாவுக்கு முன்பும் பல நாடுகளுக்கு பாரதம் மருந்துப் பொருட்களை அனுப்பி உதவி வந்தது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 18 லட்சம் டன் கோதுமையை, ஆப்கனிஸ்தான், மியான்மர், சூடான், யேமன் உள்ளிட்ட நாடுகளுக்கு பாரதம் அனுப்பி வைத்துள்ளது. உலகம் எப்போதெல்லாம் உணவு, சுகாதாரம், எரிசக்தி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் உதவும் நாடாக பாரதம் திகழ்கிறது. இத்தகைய உதவிகளை பாரதம் இனியும் தொடரும்” என்றார். உக்ரைன் ரஷ்யா போர் 6 மாதங்களுக்கும் மேலாக நீண்டுகொண்டே இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இதனால், ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாது உலகின் வளரும் நாடுகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் என்றும் போர் தொடர்வதை பாரதம் கண்டிக்கிறது” என்றும் குறிப்பிட்டார்.