ஈஷா மஹா சிவராத்திரி விழா: துணை ஜனாதிபதி பங்கேற்பு

கோவை ஈஷா யோகா மையத்தில், வரும் மார்ச் 8ம் தேதி நடக்கும், மஹா சிவராத்திரி விழாவில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்கிறார். கோவை ஈஷாவில், 30ம் ஆண்டு மஹா சிவராத்திரி விழா மார்ச் 8ம் தேதி மாலை, 6:00 மணி முதல் மறுநாள் காலை, 6:00 மணி வரை ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது.

சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில், சக்தி வாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை, ஆதியோகி திவ்ய தரிசனம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெறுகின்றன.

இந்தாண்டு, ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மஹா சிவராத்திரி விழாவில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இவ்விழாவில், நேரிலும், நேரலையிலும் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்களை இரவும் முழுவதும் விழிப்பாக வைத்து கொள்வதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

இதில், பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், தமிழ் நாட்டுப்புற பாடகர்கள் மகாலிங்கம், பஞ்சாபி இசைக்கலைஞர் குர்தாஸ் மான், கர்நாடக இசை கலைஞர் சந்தீப் நாராயணன், பாலிவுட் இசை கலைஞர்கள் ப்ரித்வி கந்தர்வ், ரஞ்சித் பட்டரசர்ஜி, பாரடெக்ஸ் உள்ளிட்ட தலைசிறந்த கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதுதவிர, ஆப்பிரிக்கா, லெபானன், பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த இசை மற்றும் நடன குழுவினரும், அரங்கை அதிர வைக்க உள்ளனர். ஈஷா மஹா சிவராத்திரி விழா, தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட, 21 மொழிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. கோவை தவிர்த்து, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நாகர்கோவில் உட்பட தமிழ்நாட்டின், 36 இடங்களில், இவ்விழா நேரலை ஒளிபரப்பாக கொண்டாடப்பட உள்ளது.