இளைஞர்கள் வைத்த சோதனை

ஒருமுறை அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தர், இறைவனை உணர்ந்த நிலை என்பது பற்றிச் சொற்பொழிவு செய்தார். அதில் ‘இறைவனைப் பற்றிய உயர்ந்த அனுபவத்தை நேரடியாகப் பெற்ற ஒருவர் எந்தச் சூழ்நிலையிலும் கலங்குவதில்லை, பதற்றப்படுவதில்லை என்று குறிப்பிட்டார். இந்தச் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் இளைஞர்கள் சிலரும் இருந்தார்கள். இவர்கள் உயர்கல்வி கற்றவர்கள். ஆனால் மனம் போனபடி வாழ்ந்தனர். அவர்கள் விவேகானந்தர் கூறியதை பரிசோதித்துப் பார்க்க முடிவு செய்தனர். எனவே, அவர்கள் விவேகானந்தரை ஒரு சொற்பொழிவுக்காக அழைத்தனர். ஒப்புக் கொண்ட சுவாமிஜி, சொற்பொழிவு செய்யும் இடத்திற்குச் சென்றார். அங்கு ஒரு மரத்தொட்டியைக் கவிழ்த்துப் போட்டு, இதுதான் சொற்பொழிவு மேடை, இதில் நின்றுதான் நீங்கள் பேச வேண்டும் என்றனர்.

இதற்கு மறுப்பு ஏதும் கூறாமல் அதை ஏற்றுக்கொண்டார். சொற்பொழிவு ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் அவர் சொல்லிக் கொண்டிருந்த கருத்தில் மனம் ஒன்றி சூழ்நிலையை மறந்து பேசினார். திடீரென்று அவரைச் சுற்றிலும் துப்பாக்கிக் குண்டுகள் வெடித்தன, துப்பாக்கிக் குண்டுகளின் ஓசை பலமாக எழுந்தது. சில குண்டுகள் விவேகானந்தரின் காதின் அருகிலும் பாய்ந்து சென்றன. சுற்றிலும் பதற்றமும் கூக்குரலும் எழுந்தன.

ஆனால், விவேகானந்தரிடம்  எந்த சலனமும் இல்லை. அவர் சூழ்நிலையால் சிறிதும் பாதிக்கப்படவில்லை, தொடர்ந்து சொற்பொழிவு செய்தார். இப்போது, விவேகானந்தரை சோதித்துப் பார்த்த இளைஞர்கள் தோற்றார்கள். எதுவுமே அங்கு நடைபெறாதது போல், விவேகானந்தர் உரிய நேரத்தில் தன் சொற்பொழிவை முடித்தார்.

அந்த இளைஞர்கள் விவேகானந்தரிடம், ‘சுவாமிஜி, நீங்கள் அப்பழுக்கற்றவர். நீங்கள் மற்றவர்களுக்கு என்ன போதிக்கிறீர்களோ, அப்படியே வாழ்கிறீர்கள்’ என்று கூறி மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்கள்.