இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 27 பேர் சிறைபிடிப்பு: ராமேசுவரத்தில் இன்று முதல் வேலைநிறுத்தம்

தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதைக் கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

ராமேசுவரம் துறைமுகத்தில் நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். தலைமன்னார் அருகே கென்னடி, பாஸ்கர் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப் படகுகளில் 15 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி 2விசைப்படகுகளையும், 15 மீனவர்களையும் சிறை பிடித்தனர்.

அதேபோல, கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்த சர்புதீன்,லிட்டன், மண்டபத்தைச் சேர்ந்தமரிய வாஷிங்டன் ஆகியோருக்குச்சொந்தமான 3 விசைப்படகுகளையும், அதிலிருந்த 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். தலைமன்னார் கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட 15 மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். கச்சத்தீவு அருகே கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த விவகாரம்தொடர்பாக ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளம் அருகில் மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மீனவப் பிரதிநிதி என்.ஜே.போஸ் தலைமை வகித்தார். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று முதல் (அக். 16) தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவது என்று அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும்,வரும் 18-ம் தேதி பாம்பன் பாலத்தில் மறியல் போராட்டம் நடத்தவும் மீனவர்கள் தீர்மானித்துள்ளனர்