இந்தியாவுக்கு 5 தங்கம்: ‘பாரா’ பாட்மின்டனில் அசத்தல்

ஸ்பானிஷ் பாரா பாட்மின்டனில் இந்தியாவுக்கு 5 தங்கம் கிடைத்தது.
ஸ்பெயினில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்பானிஷ் ‘பாரா’ பாட்மின்டன் சர்வதேச தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் (எஸ்.எச். 6) பைனலில் இந்தியாவின் நித்யா ஸ்ரீ சுமதி சிவன், பெருவின் கார்மன் கியுலியானா மோதினர். இதில் நித்யா ஸ்ரீ 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.
பெண்கள் ஒற்றையர் (எஸ்.யு. 5) பைனலில் இந்தியாவின் துளசிமதி முருகேசன் 21-17, 21-13 என சகவீராங்கனை மணிஷா ராமதாசை வீழ்த்தி தங்கத்தை தட்டிச் சென்றார்.
ஆண்கள் ஒற்றையர் (எஸ்.எல். 3) பைனலில் இந்தியாவின் நிதேஷ் குமார் 21-11, 21-13 என உக்ரைனின் ஒலெக்சாண்டர் சிர்கோவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

கலப்பு இரட்டையர் (எஸ்.எல். 3 – எஸ்.யு. 5) பைனலில் இந்தியாவின் நிதேஷ் குமார், துளசிமதி ஜோடி 22-20, 21-15 என பிரான்சின் லுாகாஸ், நோயல் ஜோடியை வீழ்த்தி தங்கத்தை தனதாக்கியது. ஆண்கள் இரட்டையர் (எஸ்.எல். 3 – எஸ்.எல். 4) பைனலில் இந்தியாவின் நேஹல் குப்தா, நவீன் சிவகுமார் ஜோடி 22-20, 22-24, 21-19 என சகநாட்டை சேர்ந்த தீப் ரஞ்சன், மனோஜ் சர்க்கார் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது.
மற்ற பைனலில் இந்தியாவின் மன்தீப் கவுர் (எஸ்.எல். 3), சுஹாஸ் யத்திராஜ் (எஸ்.எல். 4) தோல்வியடைந்து வெள்ளி வென்றனர்.

இத்தொடரில் இந்தியாவுக்கு 5 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கம் கிடைத்தன.