இந்தியப் பகுதிகள் மீது கை வைக்க எந்த நாட்டுக்கும் தைரியம் கிடையாது – ராஜ்நாத் சிங்

தில்லியில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த ராஜ்நாத் சிங்கிடம், இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சீன ராணுவத்தால் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, எல்லையில் பிரச்னை ஏற்பட்டால் பாதுகாப்புப் படை வீரர்கள் அதை கவனித்து கொள்வார்கள் எனவே யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. நமது வீரர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என பதிலளித்தார்.

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த சிறுவர்களிடம் பயங்கரவாத கருத்துகள் பரப்பப்படுவது கவலையளிப்பதாக முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, அங்குள்ள சிறுவர்களும் நமது நாட்டினர்தான், அவர்களை எதிர்மறை கண்ணோட்டத்தில் காண வேண்டாம் என்று பதிலளித்த ராஜ்நாத் சிங், இந்தியப் பகுதிகளை நோக்கி கை வைப்பதற்கு எந்த நாட்டுக்கும் தைரியம் இல்லை என்று தெரிவித்தார்.