” இது சாதாரண தேர்தல் அல்ல ., ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது” – பிரதமர் மோடி கடிதம்

நாளை (ஏப்., 19) தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதல்கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்குகிறது. நாடு முழுவதும் பல கட்ட தேர்தல் முடிந்து வரும் ஜூன் 4 ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடி தே.ஜ., கூட்டணி அனைத்து வேட்பாளர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இது ஒரு சாதாரண தேர்தல் அல்ல என்பதை இந்த கடிதம் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன். காங்கிரஸ் ஆட்சியின் கடந்த 50 ஆண்டு கால ஆட்சியில் நாட்டு மக்கள் பல தரப்பினரும் பட்ட கஷ்டங்கள் ஏராளம். கடந்த 10 ஆண்டில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளோம். சமூகத்தில் ஒவ்வொரு பிரிவினரும் பலன் பெற்றுள்ளனர். ஆனாலும் இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது. அனைவருக்கும் சிறந்த வாழ்க்கையை உருவாக்கும் எங்கள் பணியில் இந்த தேர்தல் திடமாக இருக்கும். பா.ஜ.க., மற்றும் நமது கூட்டணி பெறும் ஒவ்வாரு ஒட்டும் நிலையான அரசை அமைப்பதற்கும், 2047 ல் இந்தியா வளர்ந்த நாடாக அமைக்க நாம் செல்லும் பயணத்திற்கு நல்ல ஊக்கத்தை தரும். இந்த முக்கியமான தருணத்தில் நான் கேட்டு கொள்வது என்னவென்றால், தேர்தல் முடியும் கடைசி தருணம் வரை நாம் ஊக்கமாக உழைக்க வேண்டும். அதே நேரத்தில் உங்களின் மற்றும் உங்களை சுற்றியுள்ள நபர்களின் உடல் நலத்தையும் பேணி காத்திட வேண்டும். கோடை காலம் என்பதால் பெரும் சிரமங்கள் இருக்கும். இந்த தேர்தல் நமது தேசத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது. எனவே, வெப்பம் தொடங்கும் முன், அதிகாலையில் வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். பாஜகவின் வேட்பாளராக, எனது காலத்தின் ஒவ்வொரு தருணமும் எனது சக குடிமக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது . இது சாதாரண தேர்தல் அல்ல நாட்டின் முன்னேற்றத்திற்கான தேர்தல். பிரகாசமான எதிர்காலத்துடன் இணைக்க இந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பாகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.