இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா

தேர்தல் நெருங்குவதால் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 2024 க்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பார்லி.,யில் தாக்கல் செய்தார். முன்னதாக அவர் ஜனாதிபதி மாளிகைகக்கு சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். அவருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார் ஜனாதிபதி.

பட்ஜெட் தாக்கல் செய்த போது முன்னுரையில் நிதி அமைச்சர் நிர்மலா பேசியதாவது: 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார முன்னேற்றம் கண்டு வருகிறது. பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு நாடு பெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது. அனைவருக்கும் எல்லாம் கிட்ட, அனைத்து தரப்பிலும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் ஏழைகளை அரசின் திட்டங்கள் சென்றடைகிறது. வேலை வாய்ப்பு பெருகி வருகிறது. 80 கோடி மக்களுக்கு இலவச ரேசன் பெற்று பயன்பெற்றுள்ளனர். இது போன்ற வளர்ச்சி பணியால் மீண்டும் எங்களை மக்கள் ஆட்சியில் அமர்த்துவார்கள்.

* பார்லி.,யில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், நிர்மலா சீதாராமனுக்கு 6வது பட்ஜெட்டாகும்.
* மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு இது தொடர்ச்சியான 11வது பட்ஜெட்.
* நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் நான்காவது முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கமாக பட்ஜெட் குறித்த முக்கிய தகவல்கள் அடங்கிய கோப்புகளை சூட்கேஷில் எடுத்து வருவதே வழக்கம். ஆனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுவரை தாக்கல் செய்த 5 பட்ஜெட்களில் 2 முறை சிவப்பு நிற வெல்வெட் துணியில் வைத்து லெட்ஜராக எடுத்து வந்துள்ளார்; 3 முறை ‘டேப்’ எடுத்து வந்தார். அதேபோல் தான் இம்முறையும் சிவப்பு நிற வெல்வெட் துணியால் ஆன பையில் பட்ஜெட் ஆவணங்கள் அடங்கிய ‘டேப்’ எடுத்து வந்தார்.