ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில், தேசிய கல்வி கொள்கை குறித்த 2 நாள் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘நாட்டின் வளர்ச்சிக்காக கல்வியில் மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியம் என்பதால் தொலைநோக்கு பார்வையோடு தேசிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கையால் கல்வித்துறையில் புதிய சீர்திருத்தம், புதிய மறுமலர்ச்சி ஏற்படும். தேசிய கல்வி கொள்கையின் அடித்தள தத்துவத்தை புரிந்துகொள்ள வேண்டும். இதனை முழுமையாக படித்தால்தான் புரிந்து கொள்ள முடியும். அப்போதுதான் அதனை செயல்படுத்த முடியும். பாரதத்தை ஆண்ட ஆங்கிலேயர்கள், நமது பூர்வீகக் கல்வி முறை, தொழில்துறையை திட்டமிட்டு அழித்தனர். இதனால் பாரத சமூக அமைப்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டு மேற்கத்திய நாடுகளுக்கு அடித்தளமிட்டது. தேசிய கல்விக் கொள்கை பாரத அறிவு அமைப்பு உட்பட நமது கடந்த காலத்தின் பெருமையை மீண்டும் கண்டுபிடிப்பதில் புரட்சிகர மாற்றத்தை ஆதரிக்கிறது. பல மொழிகள், பல இனங்கள், பல விதமான பழக்கங்கள் இவை அனைத்தும் ஒன்றிணைத்து தேசிய கல்வி கொள்கை திட்டத்தின் மூலம் கல்வி முறையை தரம் உயர்த்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரதம் தற்போது 75வது ஆண்டு சுதந்திர விழாவை கொண்டாடி வருகிறது. அடுத்த கால் நூற்றாண்டு முக்கியமானது. நமது தேசம் 2047 ஆண்டில் 100வது ஆண்டு சுதந்திர விழாவை கொண்டாடும் போது உலகத்தின் தலைவராக பாரதம் இருக்க வேண்டும். இந்த இலக்கை நோக்கி தேசிய கல்வி கொள்கை பயனிக்கிறது’ என தெரிவித்தார்.