ஆந்திராவில் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தலை தடுக்க முயன்ற காவலர் கார் ஏற்றி கொலை

ஆந்திராவில் செம்மர கடத்தலை தடுக்க முயன்ற காவலர் மீது கடத்தல் கும்பல் காரை ஏற்றி கொலை செய்தது. ஆந்திராவின் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதிகளில் செம்மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு, கடத்தப்படுகின்றன. இதனை தடுக்க ஆந்திர அரசு, சிறப்பு அதிரடிப்படையை நியமித்துள்ளது. இந்த படை காவலர்கள் செம்மர கடத்தலை தடுக்க ஆந்திர எல்லையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் நேற்று அதிகாலை 3 மணியளவில்
அதிரடிப் படையை சேர்ந்த காவலர்கள் திருப்பதி அடுத்துள்ள அன்னமைய்யா மாவட்டம், கேவி பல்லி மண்டலம், குன்றேவாரி பல்லி கூட்டு ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வேகமாக வந்த காரை காவலர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.
அந்த கார், காவலர் கணேஷ் (32) மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. அதிரடிப்படை காவலர்கள் விரட்டி சென்று கடத்தல் கும்பலை சேர்ந்த 2பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் அதில் இருந்த 7 செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய இருவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இதனிடையே படுகாயம் அடைந்த காவலர் கணேஷை, பீலேரு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காவலர் கணேஷின் குடும்பத்தினருக்கு ரூ. 30 லட்சம் உதவி தொகையை வழங்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். கணேஷின் குடும்பத்தினருக்கு அவர் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார்.