அர்த்தமுள்ள கண்ணதாசன்

“பருவ காலத்தில் சருமத்தின் அழகு மினுமினுப்பதைப் போல், ஆரம்ப காலத்தில் நாத்திக வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். நடிகையின் ‘மேக்அப்’பைக் கண்டு ஏமாறுகிற சராசரி மனிதனைப்போல், அன்று இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். அந்த கவர்ச்சி எனக்கு குறுகிய காலக் கவர்ச்சியாகவே இருந்தது இறைவனின் கருணையே!” என்று தனது மனக்கதவை முழுவதும் திறக்கிறார் கவிஞர் தமது வனவாசம் என்ற படைப்பில். பிர்லாவைப் போல் சம்பாதித்து ஊதாரியைப் போல செலவழித்து பல நேரங்களில் பிச்சைக்காரனைப்போல ஏங்கி நிற்கும் வாழ்க்கையே என் வாழ்க்கையாக இருந்தது என்ற உண்மைய மட்டுமல்ல; ஒரு பிரஞையாற்ற வாழ்க்கையை 1950களில் இருந்தே தான் மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதையும் அதில் அப்பட்டமாகக் கூறுகிறார்.

வெள்ளைக்காரனின் கால்களை கட்டிப்பிடித்துக் கொண்டு ‘போகாதே போகாதே என் கணவா’ என்று பாடியவர்களுக்கு நாட்டுப் பற்று எங்கிருந்து வரும்? நாட்டு பற்று இல்லாதவர்களுக்கு தெய்வப் பற்று எங்கிருந்து வரும்? தெய்வப் பற்று இல்லாதவர்களுக்கு நாணயம், நேர்மை இவற்றின் மீது நம்பிக்கை எங்கிருந்து வரும்? இந்த நாலரை கோடி மக்களில் நீங்கள் சலித்துச் சலித்து எடுத்தாலும், நாலாயிரம் நாத்திகர்களைக் கூட காண முடியாது. இங்குள்ள பழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும், திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். ஆகவே இந்த காரியங்களுக்கு யாரும் துணை வர மாட்டார்கள். நம்பிக்கை இல்லாதவன் கோவிலுக்கு போக வேண்டாம்.நம்புகிறவனை தடுப்பதற்கு இவர்கள் யார்? என்று நாத்திகர்களை சாடவும் தயங்கவில்லை கவிஞர்.

தனக்கு வந்த நிலை பின்னாளில் எவருக்கும் வரக்கூடாது என்று எண்ணத்தின் முழு வடிவம் தான் அவரது ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ எனும் பொக்கிஷம். அதில், சான்றாக தன் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளை எடுத்துக்காட்டுக்களாக முன் வைக்கிறார். என்னே உயரியதொரு நோக்கம்? பத்து பேரை நல்லவராக்குவது போல் புனித பணி உலகத்தில் வேறெதுவும் இல்லை. அதற்கு இளைஞர்கள் கைக்கொள்ளவேண்டிய ஒரே நம்பிக்கை மத நம்பிக்கை என்றும், மதமும், அது காட்டும் தெய்வமும், அதன் வழிவந்த அவதார புருஷர்களும் ஒரு நேர்மையான ஞானம் மிக்க சமுதாய செயல்பாட்டாளர்கள் என்று முழங்குகிறார்.

உடல்நலக் குறைவு காரணமாக 1981, ஜூலை 24ல் அமெரிக்காவில் சிகாகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அக்டோபர் 17ல் மறைந்தார். தான் மறைந்தாலும், அவரே எழுதி பாடியுள்ள அவரின் பாடலில், ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என பாடியபடி அனைவரின் மனங்களிலும் நீங்காமல் என்றும் வாழ்ந்துகொண்டுள்ளார் கவியரசு கண்ணதாசன்.