“அரசின் நலத்திட்டங்களால் பயனடைந்த கோடிக்கணக்கான மக்கள்”: பிரதமர் மோடி பெருமிதம்

“மத்திய அரசின் நலத் திட்டங்களால், கடந்த 9 ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்கள் பயன் அடைந்துள்ளனர்” என பிரதமர் மோடி கூறினார்.

‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா தனது பயணத்தின் 50 நாட்களை 3 நாட்களுக்கு முன்பு நிறைவு செய்தது. இந்த யாத்திரையில் 11 கோடி பேர் இணைந்துள்ளனர். அரசின் திட்டங்களில் மக்கள் அனைவரும் பயன் அடைய வேண்டும். அந்தவகையில், கடந்த 9 ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்கள் பயன் அடைந்துள்ளனர்.

மும்பை போன்ற பெருநகரமாக இருந்தாலும் சரி, மிசோரமில் உள்ள கிராமமாக இருந்தாலும் சரி, கார்கில் மலையாக இருந்தாலும் சரி, கன்னியாகுமரியில் உள்ள கடற்கரையாக இருந்தாலும் சரி, ஏழை மக்களிடம் இப்போது மாற்றத்தைக் காண முடியும்.

ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிகாரம் பெற வேண்டும். அப்போது தான் நாடு வலிமை பெறும். தற்போதைய காலகட்டத்தில் பெண்களே முன் வந்து புதிய சாதனைகளை படைத்து வருகின்றனர். விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா மூலம் ஏழை மற்றும் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த மக்கள் பயன் அடைந்துள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.