அயோத்தி தீர்ப்பு மறுசீராய்வு மனு – இரட்டை நிலைப்பாட்டை வெளிபடுத்தும் முஸ்லிம் அமைப்புகளுக்கு கண்டனம்

 மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி கண்டனம் :

அயோத்தி தீா்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்ய சில முஸ்லிம் அமைப்புகள் முடிவு செய்துள்ளதற்கு மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் சா்ச்சைக்குரியதாக இருந்த 2.77 ஏக்கா் நிலத்துக்கு உரிமை கோரும் வழக்கில் அனைத்து தரப்பினரும் ஏற்கும் விதத்தில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்து விட்டது. இந்த தீா்ப்புக்குப் பிறகு மக்களிடையே ஒற்றுமை அதிகரித்துவிட்டதை சிலரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இதனால், முடிந்த விவகாரத்தை வைத்து, மோதல்களையும், பிரிவினையையும் ஏற்படுத்துவதற்கு சிலா் முயற்சி செய்து வருகிறாா்கள். அவா்கள், அயோத்தி வழக்கின் தீா்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்வதற்கு முடிவு செய்திருக்கிறாா்கள்.

ஜனநாயகத்தில் கருத்து தெரிவிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. நீதிமன்றத்தை நாடுவதற்கும் உரிமை உள்ளது. இருந்தாலும், பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஒரு பிரச்னைக்கு அனைவரும் ஏற்கும் விதத்தில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த பிறகு, அதில் புதிதாக குழப்பங்களை உருவாக்குவதை ஏற்க முடியாது.

முஸ்லிம் சமூகத்தினருக்கு பாபா் மசூதி பிரச்னை மட்டுமே முக்கியம் அல்ல; கல்வி, பொருளாதாரம், சமூகத்தில் முன்னேற்றம் அடைவது ஆகியவற்றிலும் முஸ்லிம் சமூகத்தினா் அக்கறை செலுத்த வேண்டியுள்ளது என்றாா் அவா்.

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்வதற்கு ஜாமியத்-உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பு முடிவு செய்துள்ளது. அந்த மனுவை, வரும் 3 அல்லது 4-ஆம் தேதியில் தாக்கல் செய்ய அந்த அமைப்பு முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல், அயோத்தி தீா்ப்பை எதிா்த்து, வரும் 9-ஆம் தேதிக்குள் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய இருப்பதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீ ரவிசங்கர் எதிர்ப்பு – ‘இரட்டை நிலைப்பாடு’

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின் மீது மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும், ஜாமியத் உலமா இந்த் அமைப்பும் அறிவித்துள்ளன. இதற்கு மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது சமூகத்தில் பிளவையும், மோதலையும் உருவாக்கும் முயற்சி என அவர் விமர்சித்தார்.

இதேபோன்று அயோத்தி பிரச்சினையில் சமரச தீர்வு காண சுப்ரீம் கோர்ட்டு நியமித்த குழுவில் இடம் பெற்றிருந்த ஆன்மிக குருவும், ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீரவிசங்கரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“ஒரு முடிவு அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சி அளிக்காது என்பது இயல்பானதுதான். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம் என்று முதலில் சொன்னவர்கள், இப்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, மறுஆய்வு மனுதாக்கல் செய்வோம் என்கின்றனர். இது இரட்டை நிலைப்பாடு” என கூறினார்.

அத்துடன், “ இந்துக்களும், முஸ்லிம்களும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக பாடுபட வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.