அயோத்தி – தென்கொரியா இடையே 2000 ஆண்டு முன்பே திருமண பந்தம்: வரலாற்றுக் கதைகளில் தகவல்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு தென்கொரியா நேற்று வாழ்த்து தெரிவித்தது. அதேநேரம், அயோத்தி நகரத்தைப் பொருத்தவரையில் இருநாடுகளுக்கு இடையிலும் பாரம்பரியமான உறவு உள்ளதாக தென்கொரியா கூறியுள்ளது.இதுகுறித்து இந்தியாவில் உள்ள கொரிய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது: ராமர் கோயிலின் திறப்புக்காக இந்திய தேசத்துக்கு வாழ்த்துகள். அயோத்தி கொரிய-இந்திய உறவுகளுக்கு அடையாள முக்கியத்துவம் வாய்ந்த நகரம். ராமர் கோயில் திறப்பால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஆன்மிக பந்தங்கள் மேலும் வலுப்பெறும்.

தென்கொரியாவில் ஒரு பிரிவினர் அயோத்தியை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக பார்க்கிறரா்கள். ஏனெனில், அந்த நகரத்தில் தங்களது வம்சாவளியைக் கண்டுபிடிக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.இந்திய இளவரசி சூரிரத்னா தென் கொரிய அரசரை மணம் புரிந்ததாக வரலாற்று கொரியக் கதைகளில் கூறப்பட்டதே இதற்கு முக்கிய காரணம். இளவரசி சூரிரத்னா கொரிய புராணத்தில் ஹியோ ஹவாங்-ஓக் என்றும் அழைக்கப்படுகிறார். அயோத்தியைச் சேர்ந்த இவரை சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, கி.பி.48-ல் கொரிய அரசர் கிம் சுரோ மணமுடித்துள்ளார்.அயோத்தியின் அப்போதைய அரசரின் கனவில் அவரது 16 வயது மகளை கொரிய அரசர் கிம் சுரோவுக்கு மணமுடித்து கொரியாவுக்கு அனுப்பும்படி கடவுள் கட்டளையிட்டதாக நம்பப்படுகிறது. இந்த தம்பதியினர் 10 பிள்ளைகளைப் பெற்று இருவரும் 150 வயதுக்கு மேல் வாழ்ந்துள்ளனர்.

ராணி ஹியோ ஹவாங்-ஓக்கின் கதை பண்டைய கொரிய உரையான சம்குக் யூசா வில் விவரிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.