அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதை தடுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதை தடுக்கக் கோரி, அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு கட்சியின் கொடிக் கம்பம் நிறுவப்பட்டது. அனுமதியின்றி கொடிக் கம்பம் வைக்கப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு காவல் துறையினரும் மாநகராட்சி ஊழியர்களும் சென்று அந்தக் கொடிக் கம்பத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கொடிக் கம்பத்தை அகற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட ஜேசிபி வாகனத்தை சிலர் சேதப்படுத்தினர். இது தொடர்பாக கானாத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பாஜக மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். பின்னர், அனைவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அக்டோபர் 21-ம் தேதி அமர் பிரசாத் ரெட்டி கானாத்தூர் போலீஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், சென்னையில் பதிவாகி இருந்த மேலும் இரண்டு வழக்குகளிலும் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில், தனது கணவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தடை விதிக்கக் கோரி அமர் பிரசாத் ரெட்டி மனைவி நிரோஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், ஜேசிபி இயந்திரம் உடைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடந்த இடத்தில் தனது கணவர் இல்லாத நிலையில், பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “தமிழக அரசு மற்றும் ஆளும் கட்சியான திமுகவின் சமூக விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதால், எனது கணவர் மீது பொய் வழக்கு பதிவுசெய்யப்பட்டு சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர். போலி பாஸ்போர்ட் வழங்கிய விவாகரத்தில் உளவுத் துறை முன்னாள் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு தொடர்பு இருப்பதாக எனது கணவர் புகார் கூறியதால், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தனது நண்பரான தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிடம் சொல்லி பொய் வழக்கு பதிவு செய்து தனது கணவரை குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையருக்கு மனு அளித்தும், மனு குறித்து பதிலளக்கவில்லை. எனவே, எனது கணவர் அமர் பிரசாத் ரெட்டியை, குண்டர் சட்டத்தில் அடைக்க தாம்பரம் காவல் ஆணையருக்கு தடை விதிக்க வேண்டும்” என அம்மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, பாஜக கொடிக் கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில், அக்கட்சி நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட நான்கு பேரையும் ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க ஆலந்தூர் மாஜிஸ்திரேட் சந்திரபிரபா உத்தரவிட்டார்.