அந்தமான் அக்கிரமம்!

அந்தமான் தீவுகளுக்கு வெள்ளைக்கார ராணுவ அதிகாரிகள், சதிகாரர்கள் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. சுதந்திர பாரதத்தில் இந்த களங்கம் நீடிக்கலாமா? ஒரு ஆய்வு.

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ‘தீவாந்தர தண்டனை’ கொடுப்பார்கள் – அதாவது அந்தமான் தீவுக்கு அனுப்பி சாகடிப்பார்கள் வெள்ளைக்கார ஆட்சியாளர்கள். 1857 மாபெரும் சுதந்திரப் பேரெழுச்சியின்போது எத்தனையோ ஆயிரம் பேரை அந்நிய ஆட்சியாளன் அடைத்துக் கொடுமைப்படுத்திய தீவு அந்தமான் தீவுக் கூட்டம். இன்று அது சுற்றுலாப் பயணிகளுக்கு சொர்க்கமாக விளங்குகிறது. ஆனால் 1857ன் வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமிபாய் போன்றவர்களை கொன்ற ஹியூரோஜ் என்பவனின் பெயரால் ஒரு தீவு அவ்கே அங்கே இருப்பது சுதந்திர பாரதத்துக்கே அவமானம். அதுவும் தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்பே இந்த தீவுகளில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மூவண்ணக் கொடி ஏற்றி சுதந்திர பிரகடனம் செய்திருக்கிறார் என்னும்போது இந்த அவமானத்தைத் துடைப்பது அத்தியாவசியம் ஆகிறது.

இயற்கையின் சௌந்தர்யத்துக்கு அந்தமான் தீவுகள் உலகப் புகழ் பெற்றவை. உதாரணமாக ஹாவ்லாக் தீவில் உள்ள ராதா நகர் பீச் பூமிப் பந்தின் பொன்னுலகம் எனலாம். இங்கே ஆண்டுதோறும் லட்சக்கணக்கான தேச, சர்வதேச சுற்றுப்பயணிகள் வந்துபோகிறார்கள். தலைநகரமான போர்ட் பிளேர் அருகிலேயே அமைந்துள்ள இந்த தீவு மக்களின் முக்கிய தொழில் விவசாயம், தோட்டத் தொழில். ஆனால் சுற்றுலாதான் தீவு மக்களின் பொருளாதாரத்தை செழுமையாக்கியுள்ளது. இத்தனை இருந்தாலும் அந்நியன் பெயரால் தீவுகள் அழைக்கப்படுவது முள்ளாய் உறுத்துகிறது.

யார் இந்த ஹாவ்லாக்? 1857களில் அலகாபாத், லக்னோ வட்டாரங்களில் சுதந்திரப் போராட்ட வீரர்களை கொடூரமாக ஒடுக்கியவன்தான் ஜெனரல் ஹென்றி ஹாவ்லாக். அவன் பெயரால் தீவு. ஆனால் தேசத்திற்காக இன்னுயிர் தந்த பல்லாயிரம் வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் ஓரிரு புத்தகங்களோடு ஒடுங்கிப்போய்விட்டதுதான் சோகம்.

சுதந்திரம் அடைந்தபின் எத்தனையோ நகர்கள், வீதிகள், பூங்காக்கள் பெயர் மாற்றம் கண்டன. பம்பாய் மும்பை ஆனது. மதராஸ் சென்னை ஆனது. அலகாபாத் நகரில் உள்ள ஆல்பிரட் பார்க் சந்திரசேகர ஆசாத் பூங்காவாகியுள்ளது. அதென்ன அந்தமான் தீவுகளில் ஒன்று அக்கிரமக்காரன் ஹாவ்லாக் பெயரால் நீடிப்பது? இது பாரதிய பெயர் தாங்குவதற்கு நல்ல நேரம் எப்போது பிறக்குமோ?

2016 பிப்ரவரியில் யோகா குரு பாபா ராம் தேவ் போர்ட் பிளேரில் யோகா முகாம் நடத்தினார். அப்போது அவர், தீவிற்கு பாரதிய பெயர் அவசியம் என்று வலியுறுத்தினார். அவர் மட்டுமல்ல மேலும் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். ஜான்சிராணி லட்சுமிபாய் படைவீரர் வம்சத்தினரான டாக்டர் பிரேம் கிஷன் கூறியது முக்கியத்துவம் பெறுகிறது: எதிர்கால சந்ததியினர் சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவைப் போற்றி தேசத்தை காப்பாற்றும் ஊக்கம் பெறும் விதத்தில் இந்தத் தீவுகளின் பெயர்கள் அமைய வேண்டும்”.

சுயமரியாதை உள்ள பாரதியர் எவரும் சகித்துக்கொள்ள முடியாத விதத்தில் மேலும் இரண்டு தீவுகள் அந்நியன் பெயரால் அழைக்கப்படுகின்றன. நீல் ஐலண்டு, ஹ்யூரோஜ் ஐலண்டு ஆகியவைதான் அவை. நீல் தீவும், ஹாவ்லாக் தீவு போன்றே அடிமைத்தனத்தின் முத்திரையோடுதான் இருந்து வருகிறது. ஆனால் தீவு மக்களோ கிராமங்களுக்கு சீதா நகர், பரத்பூர், லக்ஷ்மண்பூர், ராம் நகர் என்று பெயர் சூட்டி வசிக்கிறார்கள். எனவே, நீல் ஐலண்டு என்ற பெயர் மாற்றப்பட்டாக வேண்டும்.

மூன்றாவது தீவு, ஹ்யூரோஜ் தீவு. ஜான்சி ராணி லட்சுமிபாயை கொன்ற அந்நிய ஆட்சியின் பட்டாள அதிகாரி ஹ்யூரோஜ் பெயர் அன்னிய அரசால் இந்தத் தீவுக்கு சூட்டப்பட்டு இன்றும் நீடிக்கிறது. சுருக்கமாக இதை ரோஜ் ஐலண்டு என்று அழைக்கிறார்கள்.

விக்கிபீடியா அந்தமான் பெயர்கள் பற்றி குறிப்பிடுகையில் அடிமைத்தனத்தை வெட்டவெளிச்சமாக்கியுள்ளதைப் பாருங்கள்: “Neil Island is an island in the Andaman Islands of India, located in Ritchie’s Archipelago. It is apparently named after James George Smith Neil, a British soldier who had sternly dealt with the insurgents during the suppression of the 1857 Mutiny…”

வெள்ளைக்கார ஆட்சி ராணி லட்சுமிபாயின் படை வீரர்களை அந்தமான் தீவில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியது. அவர்களின் சந்ததிகள் இப்போதும் போர்ட் பிளேரில் வசிக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் டாக்டர் பிரேம் கிஷன். ஜான்சி ராணியை கொலை செய்த அந்நியன் பெயரால் பாரதத்தில் ஒரு தீவு இருப்பது போர்ட் பிளேர் வாசிகளுக்கு மட்டுமல்ல இமயம் முதல் குமரி வரை பாரத நாடு முழுவதும் உள்ள பாரதியர்களுக்கு அவமதிப்பு, வெட்கக்கேடு. பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு துணை ஆளுனராக இருந்த டாக்டர் ராஜேந்திர குமாரி வாஜ்பாயி இந்தத் தீவின் பெயரை மாற்ற முயற்சி தொடங்கினார். ஆனால் அவருக்கு அந்தப் பதவி கூடுதல் பொறுப்பாகத்தான் இருந்தது. எனவே முயற்சி நிறைவேறவில்லை. இன்றோ அந்தமான் தீவுவாசிகள் அனைவருமே இந்தத் தீவுகளின் பெயர்களை பாரதிய மயமாக்கவேண்டும் என்ற ஆர்வத்தை அழுத்தமாக வெளியிடுகிறார்கள். இந்த தீவின் மண்ணின் மைந்தரான திரைப்படத் தயாரிப்பாளர் நரேஷ் சந்திர லால் கூறுகிறார்: அந்நிய கொடுங்கோலர்களின் பெயரால் தீவுகளின் பெயர்கள் நீடிப்பதை விரைவில் மாற்றுவதுதான் தீவுகளின் கலாச்சார நலனுக்கு உகந்தது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரால் இந்தத் தீவுகள் அழைக்கப்பட வேண்டும்”. போர்ட் பிளேர் அரசு சட்டக்கல்லூரி அதிகாரி டாக்டர் ரவீந்திர நாத், அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டம் பாரதத்தின் பிரிக்கப்பட முடியாத அங்கம் என்பதால் இந்தத் தீவுகளுக்கு பாரதிய பெயர்கள் சூட்டப்படுவது அவசியம்” என்கிறார். எழுத்தாளர் டி.எம். சாவித்திரி, அடிமைத்தனத்தை நினைவூட்டும் இந்த மூன்று தீவுகளின் பெயர்களையும் கூடிய சீக்கிரம் பாரதிய மயம் ஆக்கவேண்டும்” என்று வலியுறுத்துகிறார். போர்ட் பிளேரிலிருந்து வெளியாகும் ‘இன்போ இந்தியா’ ஆசிரியர் நிதீஷ் திவாரியும் இந்தத் தீவுகளின் பெயர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவூட்டும் வகையில் அமையவேண்டும் என்று கருதுகிறார்.
நன்றி: ‘பாஞ்சஜன்ய’
                                                                                                                                                           தமிழில்: பெரியசாமி

சுற்றுலா
அந்தமானைப் பாருங்கள் அழகு!

அந்தமான், நிகோபார் தீவுகளின் மொத்த எண்ணிக்கை 572. இதில் மக்கள் வசிக்கும் தீவுகள் 36. நீலக்கடலில், பச்சை நிறத் தீவுகள் இது என்பதால் இதனை ‘எமரால்டு தீவுகள்’ என்றும் அழைக்கின்றனர். உயர்ந்த மலைகளும் தூரத்து தீவுகளும் சதா உலவும் கப்பல்களும், படகுகளும் அமைதியான சூழலும் கொண்டு, சுற்றுலாப் பயணிகளை வசியப்படுத்தும் பூமி இது. அந்தமான் – நிகோபார் தீவுகளை சென்னை, கொல்கத்தாவிலிருந்து நீர்வழி, வான் வழியாகவும் விசாகப்பட்டினத்திலிருந்து நீர் வழியாகவும் அடைய முடியும். தாயகத்திலிருந்து கிட்டத்தட்ட 1,200 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இந்த அந்தமான் தீவுகளில் எல்லா மாநில மக்களும் வசிக்கிறார்கள். இந்தி மொழி ஆட்சி மொழி. இந்தத் தீவின் மக்கள் தொகையில் இரண்டாவது இடம் தமிழர்களுக்கு. தீவுகளில் சுற்றுலாக் காலம் அக்டோபர் முதல் மே வரை. கப்பலில் வர பயண நேரம் 3 நாட்களும் விமானப் பயணம் சுமார் இரண்டு மணி நேரமும் ஆகும். அவரவர் விருப்பப்படி பயணத்தைத் தேர்வு செயலாம். தீவுகளுக்கு வருவதற்கு கப்பல் பயணச்சீட்டு நான்காம் வகுப்பு ரூ.1960. சாப்பாட்டுச் செலவு தனி. வான்வழிப்பயணம் எனில் மூன்று மாதத்திற்கு முன் முன்பதிவு செதுகொண்டால் குறைவான கட்டணத்தில் பதிவு செயலாம் (ரூ.4,000/க்குள்). இங்கு வருடம் முழுதும் பருத்தியாடை அணியலாம். இங்கு பார்க்கவேண்டிய இடங்கள் – 1. கூண்டுச்சிறை 2.ரூஸ் தீவு (முன்னாள் தலைநகர்) 3.மெரினாபூங்கா 4. நீர் விளையாட்டரங்கம் 5. அபர்தீன் போர் நினைவுச்சின்னம் 6.நீர்வாழ் உயிர்க்காட்சியகம் 7. காந்தி பூங்கா 8. மானுடவியல் அருங்காட்சியகம் 9. சாமுதிரிகா 10. அந்தமான் வனத்துறை காட்சியகம், 11. குறு விலங்ககம். கப்பல், படகுகளில் சலிக்கச் சலிக்க சுத்தலாம். அலைகடல், அமைதியான கடல் இப்படிக் கடலின் எல்லா முகத்தையும் இங்கே தரிசிக்கலாம். கடலாடலாம். தனிமை வேண்டுமா? தனிமையான கடற்கரைகள் உண்டு. வாழ்க்கையில் மறக்க முடியாத இன்பச் சுற்றுலாவாக அந்தமான் சுற்றுலா இருக்கும்!
(இணையத்திலிருந்து)