‘அண்டை நாடுகளில் அவதிப்படும் இந்தியர்களுக்கு நல்லகாலம் வருது’

‘அண்டை நாடுகளில், துன்புறுத்தலுக்கு ஆளாகி வரும் இந்திய வம்சாவளியினருக்கு, மிகச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தருவோம்,” என, பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

தாய்நாடு மீது பக்தி கொண்ட நுாற்றுக்கணக்கான இந்தியர்கள், அண்டை நாடுகளில் துன்பத்தில் உழன்று வருகின்றனர். அவர்களுக்கு, இந்திய குடியுரிமை வழங்கி வளமான எதிர்காலம் அமைத்து தர உள்ளோம். இதற்காக, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை பார்லி., யில் நிறைவேற்றும் பணி துவங்கியுள்ளது.ராமஜென்ம பூமி வழக்கில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன், ‘நாட்டின் அமைதி சீர்குலையும்’ என்றெல்லாம் பேசப்பட்டது.

ஆனால், அது தவறு என்பதை மக்கள் நிருபித்து விட்டனர். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், அரசியல் சாசன சட்டம், 370வது பிரிவை நீக்கியது, அரசியல் ரீதியாக கடினமான முடிவு தான். ஆனால், அது, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களிடம், முன்னேற்றத்திற்கான புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. அரசு, நாட்டின் சிறப்பான எதிர்காலத்திற்கு, முக்கிய பிரச்னைகளில் கவனம் செலுத்தும்.

நாட்டின் பொருளாதாரத்தை, 350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தும் முயற்சியில் தீவிரமாக உள்ளோம். ஒருகாலத்தில், வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போது, பத்திரிகைகள் பாராட்டி, கட்டுரைகளை வெளியிட்டன. அந்த வங்கிகளை தற்போது துணிவுடன் ஒன்றிணைத்து வருகிறோம். வங்கித் துறை பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நாங்கள், முந்தைய அரசு போல, வெறும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதில்லை.

இலக்கு நிர்ணயித்து, செயல்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார். விரைவில் தாக்கல்அண்டை நாடுகளான, பாக்., வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில், சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளோருக்கு, இந்திய குடியுரிமை அளிக்கப்பட உள்ளது. இதற்கான, குடியுரிமை சட்ட திருத்த மசோதா, நடப்பு, பார்லி., கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.