வாரணாசி ரயில் நிலையத்திலும் இனி தமிழ்

வாரணாசி ரயில் நிலையத்தில் விரைவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அறிவிப்புகள் வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தி தெரியாத தென்னிந்திய மக்கள் புனித நகரமான வாரணாசிக்கு அதிகம் வருகை தருவதால் அவர்களின் வசதிக்கு ஏற்ப இந்த புது முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று ரயில்வே மண்டல இயக்குனர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார். பயணிகளின் வசதிக்கு ஏற்ப ரயில்வே பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்தி தெரியாதவர்கள், குறிப்பாக தென்னிந்தியாவிலிருந்து வாரணாசிக்குஅதிக எண்ணிக்கையில் மக்கள் வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலோருக்கு இந்தி தெரியாததால் பல இடங்களில் சிரமப்படுகின்றனர்.

 

எனவே, அவர்களின் வசதிக்காக, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் விரைவில் அறிவிப்புகளை வெளியிடுவோம். முதற்கட்டமாக இந்த நான்கு மொழிகளில் அறிவிப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள் இது அமலுக்கு வரும். அதன் தொடர்ச்சியாக ஒடியா, மராத்தி உள்ளிட்ட மற்ற மொழிகளில் அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.  அதேபோன்று இது முதலாவதாக பிரதமரின் தொகுதியான வாரணாசியில் இருந்து தொடங்கப்படுகிறது. படிப்படியாக மற்ற ரயில் நிலையங்களிலும் கொண்டு வரப்படும்.

இந்தி அல்லாத மொழி பேசும் பயணிகள் பலர் தங்களது ரயில் நேரம் குறித்த தகவல்களைப் பெற முயற்சிக்கும்போது நிறைய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர், பல முறை அவர்கள் தங்கள் ரயில்களை தவறவிட்டிருக்கிறார்கள். எனவே இது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். அதுதவிர, மக்களுக்கு நேரடியாக சேவை வழங்கும் பொருட்டு ரயில் நிலையத்தில் உதவி மேசையையும் அமைத்து வருகிறோம். ரயில் நிலையத்தில் ஒரு தொலைக்காட்சித் திரையும் வைக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

வாரணாசி பிரதமர் மோடியின் தொகுதி என்பது குறிபிடத்தக்கது.