“ரூ.15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் பேசியதற்கான ஆதாரத்தை முதல்வர் வெளியிட வேண்டும்” – – வானதி சீனிவாசன்

ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ.15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஜூன் 9-ம் தேதி திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தால் சிலருக்கு எரிச்சல், ஆத்திரம், பொறாமை ஏற்பட்டிருக்கிறது. அதனால் வாய்க்கு வந்தபடி எல்லாம் விமர்சிக்கிறார்கள். 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு ஒரு நபருக்கு ரூ.15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் நரேந்திர மோடி உறுதிமொழி தந்தார். ஆனால், ரூ.15 கூட தரவில்லை” என பிரதமர் மோடி பேசாத ஒன்றை, அப்பட்டமான பொய்யை, கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் கூறியிருக்கிறார். 2014 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, “வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டால், ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ.15 லட்சம் கொடுக்கும் அளவுக்கு இருக்கும்” என்றார் பிரதமர். ஊழல் அரசியல்வாதிகளும், அவர்களின் பினாமி தொழிலதிபர்களும் பதுக்கிய பணத்தின் அளவை, மக்களுக்கு புரிய வைப்பதற்காக அவ்வாறு பிரதமர் மோடி பேசினார். ரூ.15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி வாக்களித்தார் என முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக தலைவர்கள் தொடர்ந்து கட்டுக் கதையை பரப்பி வருகின்றனர். அமைச்சர் உதயநிதியும் இந்த புரட்டை திரும்ப, திரும்ப கூறி வருகிறார். முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் ஒரு பொய்யை திரும்பத் திரும்ப கூறி வருவது கடும் கண்டனத்திற்குரியது. இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியற்கான ஆதாரத்தை முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் வெளியிட வேண்டும். இல்லையெனில் தாங்கள் பேசியதற்கு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.