பொறுமைக்கு எல்லை உண்டு

மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழா, தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட தமிழக பா.ஜ.க தலைவர்அண்ணாமலை, செய்தியாளர்கள் சந்திப்பில், ‘ஹெலிக்காப்டர் விபத்து தொடர்பாக அவதூறு பரப்புபவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தமிழக காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. முப்படைகளின் தளபதி உயிரிழப்பு தொடர்பாக தவறாக பேசிய தி.மு.கவினர் பலரின் தகவல்கள் எங்களிடம் உள்ளது. மாரிதாஸ் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.கவினர் பேசியதெல்லாம் அதைவிட 100 மடங்கு மோசமான கருத்துகள். பிபின் ராவத் இறந்தது சரி என்று தி.க துணை கழகங்கள் கொண்டாடியுள்ளனர். ஆனால், இங்குள்ள அரசுக்கு அதைக் கண்டுகொள்வதில்லை. தமிழக காவல்துறை, ஆளும் கட்சியின் ஏவல் துறையாக செயல்படுகிறது. தி.மு.க எனும் கார்ப்ரேட் கம்பெனி அதனை கையில் வைத்துள்ளது. அது டி.ஜி.பி’யின் கைகளில் இல்லை. தமிழக டி.ஜி.பி, சைக்கிளில் போவதும், செல்பி எடுப்பதையும் பணியாக செய்து வருகிறார். நேர்மையான டி.ஜி.பியாக இருந்தால், பிபின் ராவத் உயிரிழப்பு குறித்து தவறான கருத்து பரப்பிய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறினார். மேலும், ‘எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம், பொறுமையை கலைத்துவிடாதீர்கள் ஒரு மாநிலத்தில் நடவடிக்கை எடுக்க வேறு மாநில காவல்துறையால் கூட முடியும். இதற்கான சி.ஆர்.பி.சி அதிகாரம் பாரதம் முழுவதும் உள்ளது’ என்பதையும் தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டினார்.