புதிய கல்வி கொள்கை; மத்திய அரசு ஒப்புதல்

இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கை வெளியிடுவதற்காக முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் 2017ல் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 1ல் தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை வெளியிட்டது. இதில் இந்தி கட்டாயம் என்ற மும்மொழி கொள்கைக்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அப்பகுதியை மட்டும் நீக்கி புதிய வரைவு கொள்கையை திருத்தி வெளியிட்டது.

வரைவு கொள்கை குறித்து பொதுமக்கள் ஆலோசனை வழங்க ஆகஸ்ட் 15 வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. இதில் கல்வியாளர்கள், பொதுமக்கள் என 2 லட்சத்திற்கும் அதிகமான கருத்துகள் கிடைத்ததாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியிருந்தார். இந்த கருத்துகளை ஆய்வு செய்ய 15 குழு அமைக்கப்பட்டது. இந்த குழு வரைவு அறிக்கையில் மாற்றம் மேற்கொள்வது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை வழங்கியது.

இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கையின் திருத்தப்பட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.