‘பார்முலா 4’ கார் பந்தயம் நிபந்தனைகளுடன் அனுமதி

சென்னையில், ‘பார்முலா 4’ கார் பந்தயம் நடத்த, நிபந்தனைகள் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கடந்த டிசம்பர் 9, 10ம் தேதிகளில், சென்னையில், பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் நைட் ஸ்ட்ரீட் பந்தயம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசுடன் இணைந்து, ரேசிங் புரமோஷன் நிறுவனம் இந்த பார்முலா 4 பந்தயத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. சென்னைக்குள் பந்தயம் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டாக்டர் ஸ்ரீஹரிஷ், லுாயிஸ்ராஜ், டி.என்.பி.எஸ்.சி., முன்னாள் உறுப்பினர் பாலுசாமி, அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலரும், வழக்கறிஞருமான மதுரைவீரன் ஆகியோர், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இம்மனுக்கள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தன. வழக்கு நிலுவையில் இருக்கும் போது, கார் பந்தயத்தை தள்ளி வைப்பதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்கிடையில், வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிந்து, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கில், நேற்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக, கொள்கை முடிவாக, பார்முலா கார் பந்தயத்தை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பந்தயத்தை தடுக்கவோ, அரசின் கொள்கை முடிவை அமல்படுத்துவதை தடுக்கவோ, இந்த நீதிமன்றம் விரும்பவில்லை; சில நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க விரும்புகிறது.

தமிழக அரசு நிர்ணயிக்கும் தேதிகளில், பார்முலா 4 கார் பந்தயத்தை நடத்திக்கொள்ள, அனுமதி அளிக்கப்படுகிறது. பந்தயம் நடக்கும் 3.7 கி.மீ., துாரத்தில், பொது மக்களுக்கு உயர் பாதுகாப்பு இருப்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும்; அசவுகரியம் இருக்கக் கூடாது. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக இருப்பவர்களுக்கு, அசவுகரியம் இருக்கக் கூடாது. பார்வையாளர்களுக்கும் தேவையான பாதுகாப்பு சாதனங்களை வழங்க வேண்டும் அரசு மேற்கொண்டுள்ள, 42 கோடி ரூபாய் செலவுத் தொகையை, ரேசிங் புரமோஷன் நிறுவனம் வழங்க வேண்டும். நிகழ்ச்சிக்கான செலவை, தனியார் நிறுவனமே ஏற்க வேண்டும். எதிர்காலத்தில், இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தும் பொறுப்பை, அரசே ஏற்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.