பாரத பூமியில் பரிவோடு நல்லிணக்கம் பூத்துக் குலுங்க தீண்டாமை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் போகணும் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

ஜோதிபா புலே

மகாராஷ்ட்ராவை சேர்ந்த ஜோதிபா புலே பள்ளியில் படிக்கும் போதே, ஜாதி ஏற்றத்தாழ்வுகளால் துயரமுற்றார். 1873ல் சத்திய சோதக் சமாஜ் என்ற அமைப்பை நிறுவினார். இதன் பொருள், உண்மையைத் தேடும் சமுதாயம் என்பதாகும்.

‘கீழ்ஜாதி’ மக்கள் மீதான அடக்குமுறை கண்டு வெகுண்டு எழுந்த அவர்,   ஹிந்து மதத்தில் இருந்தபடியே, அதன் குறைபாடுகளுக்கு எதிராக ஆவேசத்துடன் போராடினார். ஹிந்து மதத்தின் குறைபாடுகளுக்கு எதிராகப்  போராடிய போதும், மதம் மாறுவதை புலே ஆதரிக்கவில்லை. அவரும் அவரது மனைவி சாவித்திரிபாய் புலேவும், இணைந்து பாரதப் பெண்களின் நிலை உயரப் பாடுபட்டனர்.

ஹிந்து மதத்தின் குறைபாடுகளுக்கு எதிராக ஆவேசமாகப் போராடிய புலே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், இன்று ஆர்.எஸ்.எஸ்ஸில்! அவருக்கு ஆர்.எஸ்.எஸ். எவ்வளவு பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்க வேண்டும்? இது ஒரு சாதாரண விஷயம் அல்ல.

டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்

நாசிக் காலாராம் கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபடும் உரிமைக்காக 1930ல் டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் போராடினார். தாக்கப்பட்டார். தாக்கியோர் பரம்பரையைச் சேர்ந்த கோயில் அர்ச்சகர்கள் 2005ல் டாக்டர் அம்பேத்கர் பரம்பரையைச்  அணுகி, கோயிலுக்கு வரவேண்டும் என  அழைப்பு விடுத்தனர். அதை ஏற்றுக் கொண்டு காலாராமர் கோயிலுக்கு வந்தார்கள். அவர்களை வரவேற்றார் கோயில் தலைமை அர்ச்சகர். (இந்த மாற்றம் ஏற்பட காரணம், அவருக்கு ஆர்.எஸ்.எஸ்ஸுடன் நெருக்கம் ஏற்பட்டிருந்து).

 

மாடப்பள்ளி தி.க.காரர்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகில் மாடப்பள்ளி கிராமம். அந்த ஊரில், ஆர்.எஸ்.எஸ். கிளை நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு முறை ஷாகா நடைபெற்றுக்கொண்டுருக்கும்போது, அங்கு அந்த ஊரைச் சேர்ந்த ஒரு தி.க.காரர் வந்தார். ஆனால் அந்த தி.க.காரர் ஷாகாவுக்குள் நுழையாமல் ஷாகா பிரார்த்தனை முடியும்வரை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். பிரார்த்தனை முடிந்தபின், அவர் தன் கையில் வைத்திருந்த பையைத் திறந்து எல்லோருக்கும் இனிப்பு வழங்கினார்.

சங்க ஸ்வயம்சேவகர்களுக்கு ஒன்றும் புரியவில்லை; இங்குதான் எல்லா ஜாதி பையன்களும் ஒன்றாக விளையாடிக்கொண்டிருக்கிறீர்கள்; ஈ.வெ.ராமசாமி இதைத்தான் எதிர்பார்த்தார். ஈ.வெ.ரா. கண்ட கனவை நாங்களே நிறைவேற்ற முடியவில்லை. அதை நீங்கள் நிறைவேற்றி உள்ளீர்கள்” என்று  மனப்பூர்வமாக பாராட்டிப் பேசினார்.

ஆம். ஆர்.எஸ்.எஸ் அமைதியான முறையில், ஆக்கபூர்வமான முறையில், சமுதாய நல்லிணக்கத்தை உண்டாக்கி வருகிறது. வெறுப்பு இல்லை. பாகுபாடு இல்லை. அன்பு மட்டுமே குறிக்கோள். எனவே சமுதாயத்தில் நல்லிணக்கம் உண்டாக வேண்டுமானால் அது ஆர்.எஸ்.எஸ்ஸால் மட்டுமே முடியும்.

 

ஆர்.எஸ்.எஸ். பற்றிய அவதூறுகளுக்குக் கண்டனம்

உச்சநீதிமன்றம் எஸ்சி – எஸ்-டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிட்டதாகக் கூறி அதை எதிர்த்து பல்வேறு தலித் அமைப்புகள் நடத்திய நாடு தழுவிய பந்தின் போது பல மாநிலங்களில் வன்முறையுடன் கூடிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த வன்முறை துரதிருஷ்டவசமானது என்று ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத பொதுச்செயலர் சுரேஷ் ஜோஷி குறினார். நீதிமன்றத் தீர்ப்பை சாக்காக வைத்து ஆர்.எஸ்.எஸ். பற்றி விஷம் கக்கும் பொய்ப்பிரச்சாரம் செய்ய முயற்சி நடக்கிறது. இது ஆதாரமற்றது. கண்டனத்திற்குரியது என்றார் அவர். உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்கும் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கும் எந்த ஒரு தொடர்புமில்லை என்றும் அவர் கூறினார். சாதி அடிப்படையில் நடக்கும் பாரபட்சத்தையும் கொடுமையையும் சங்கம் எப்போதும் எதிர்த்து வந்துள்ளது. அந்தக் கொடுமைகளைத் தடுப்பதற்காக இயற்றப்பட்ட சட்டங்களை கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும். உச்சநீதி மன்றம் தந்துள்ள இந்தத் தீர்ப்பு ஏற்படையது அல்ல என்று தெரிவித்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு முற்றிலும் பொருத்தமானது” என்று கூறினார் சுரேஷ் ஜோஷி. விவரமான மக்கள், சமுதாயத்தில் சுமுக சூழல் நிலவச் செய்வதில் தோள் கொடுக்க வேண்டும் என்றும் சமுதாயமும் திசைதிருப்பும் முயற்சிகளுக்கு இரையாகிவிடாமல் பரஸ்பர அன்பும் நம்பிக்கையும் நிலைத்திருக்கச் செய்யவேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். கேட்டுக் கொள்கிறது” என்கிறது ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலர் அறிக்கை.

விஸ்வ சம்வாத் கேந்திரம், சென்னை

 

ஆத்மநாத சுவாமி

ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தானில் கிராம கோயில் திருவிழா. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வெளியே நின்றுகொண்டிருந்தனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தினரையும் மற்ற ஹிந்துக்கள் போல உள்ளே அனுமதித்தால் மட்டுமே உள்ளே வந்து முதல் மரியாதையை ஏற்பேன்  என்று கண்டிப்புடன் கூறிவிட்டார், அரச பரம்பரையைச் சேர்ந்த அமரர் ஆத்மநாத சுவாமி (அவர் அன்று ஆர்.எஸ்.எஸ்ஸின் மாவட்டத் தலைவர்).

 

அரங்கநாத பட்டாசாரியார்

ஆற்காடு கே. வேலூர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வந்தது. கோயிலின் பட்டாச்சாரியார் அரங்கநாதன். கும்பாபிஷேக  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  பட்டாச்சாரியார், இந்தக் கிராமத்து மக்கள் எல்லாரும் சேர்ந்து இந்தக் கும்பாபிஷேகத்தை கொண்டாடவேண்டும்.  இந்தக் கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களையும் சேர்த்துதான் நான் சொல்கிறேன். அவர்களையும் இணைத்து,  கும்பாபிஷேகத்தைக் கொண்டாடுவோம்” என்றார். ஊர்ப் பெரியவர்கள் மகிழ்ச்சியுடன் தாழ்த்தப்பட்ட சமுதாயத்து மக்களுடன் இணைந்து கும்பாபிஷேகம் நடத்த ஒப்புக் கொண்டனர். கே.வேலூர் கிராமத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டதற்கு யார் காரணம்? ஆர்.எஸ்.எஸ்! (அரங்கநாதரின் உறவினர் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்). அமைதியான முறையில், ஆக்கபூர்வமான முறையில் சமுதாய நல்லிணக்கம் நிறைவேறியது.