ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும், அசாதாரமானவர்களாக மாற்றுகிறது அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர், சங்கத் தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி, எளிய வாழ்க்கை வாழ்ந்து, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, ஆதித்தன் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…
நல்லக்கண்ணு தேவர் – பார்வதி அம்மாள் தம்பதியினருக்கு மகனாக, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரத்தில், 1960 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி பிறந்தார், ஆதித்தன் ஜி. அவருடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன் மற்றும் 3 அக்கா. தனது பள்ளிப்படிப்பை விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள பாபநாசம் லேபர் வெல்பேர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி, 11ம் வகுப்பு வரை படித்துத் தேர்ச்சிப் பெற்றார்.
அதன் பின்னர், பி.ஏ.சி ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரியில், டிப்ளமோ இன் எலக்ட்ரிக் இன்ஜினியரிங் படித்தார். கல்லூரியில் மாணவர் சங்கத் தலைவராக இருந்ததால், மாணவர்களின் உரிமைகளுக்கான பல போராட்டங்களை முன்நின்று நடத்தினார். அப்போது ஒரு முறை, அந்த ஜில்லாவின் பிரச்சாரக்காக இருந்த ஸ்ரீ கணேசன் ஜியை சந்தித்தார். அவர் மூலமாக சங்க அறிமுகம் கிடைத்தது.
1980 ஆம் ஆண்டு, பாலிடெக்னிக் கல்லூரிப் படிப்பை முடித்த உடனே, திருவேடகத்தில் முதலாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை முடித்தார். அதனைத் தொடர்ந்து 12 ஆண்டு காலம் சங்கப் பிரச்சாரக்காக இருந்தார். 1980 ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள பெரம்பூர், ஆவடி, அம்பத்தூர், வீராபுரம் போன்ற பகுதிகளில் சங்கத்தை அனைத்து பகுதிகளிலும் கொண்டு செல்லும் வேலையை செய்தார்.
அதன்பின்னர், 1981 ஆம் ஆண்டு இரண்டாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை முடித்த பிறகு, புதுச்சேரி தாலுகா பிரச்சாரக்காக பொறுப்பேற்று, அங்கே சங்கப் பணிகளை மேற்கொண்டார். கடலோரத்தில் வசிக்கும் புதுச்சேரி மீனவர்கள் மத்தியில் மதமாற்றம் அதிகம் தென்பட்டது. அதனைத் தடுத்து அவர்களிடம் சங்கத்தைக் கொண்டு செல்வதில், அரவிந்த் ஆசிரமத்தின் யோகி டாக்டர் இந்திரசேனன் ஜியுடன் இணைந்து பெரும் பங்காற்றினார். மீனவர்கள் மத்தியில், கடலோர பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி, பல நிகழ்ச்சிகளை நடத்தினார்.
அதன் பிறகு 1982ல், மூன்றாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை முடித்ததும், தேசநலன் சார்ந்த சிந்தனைக்கு மாணவர்களை ஒன்றிணைக்கும் பணிகளை மேற்கொள்ளும் ஏ.பி.வி.பி.யில் வேலை செய்ய சங்கம் பணித்தது. ஆரம்பத்தில் ஏ.பி.வி.பி.யின் சென்னை நகர அமைப்பாளராக பொறுப்பேற்று பணி செய்தார். பின்னர் மதுரை, திருச்சி, கன்னியாகுமரியில் ஏ.பி.வி.பி வேலை செய்து, தமிழகத்தின் மாநில அமைப்புச் செயலாளராக, 1986ல் பொறுப்பு ஏற்றார்.
1985ல், அஸ்ஸாம் மாநிலத்தில் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களின் ஊடுருவல் அதிகளவில் இருந்தது. அதனைத் தடுக்கும் நோக்கில், “சேவ் அஸ்ஸாம்” இயக்கத்தின் மூலமாக, நாடு முழுவதும் உள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அஸ்ஸாமில் உள்ள குவஹாத்தியில் ஒன்றுகூடி, ஊடுருவல்காரர்களை எதிர்த்துப் போராடினார்கள். அதில் தமிழகத்தில் இருந்து, 50க்கும் மேற்பட்ட ஏ.பி.வி.பி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
1991ல், “சேவ் காஷ்மீர்” இயக்கத்தின் மூலம் மாணவர்கள் ஒன்று கூடி, அந்நிய ஆக்கிரமிப்புகளை எதிர்த்து காஷ்மீரில் போராடினார்கள். அதில் தமிழகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஏ.பி.வி.பி மாணவர்கள் கலந்து கொண்டு, தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.
மாநிலம் முழுவதும் உள்ள பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், அனைத்து சமுதாயத்தினரையும் ஒன்றிணைத்து, மாணவர்களுக்காக பல நிகழ்ச்சிகளை நடத்தினார். எல்லா தரப்பில் இருந்தும், ஏ.பி.வி.பி.க்கு மாணவர்கள் வருவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு, அதில் வெற்றியும் கிடைத்தது.
இலங்கையில் நடக்கும் பிரச்சினைகளை, தமிழக மாணவர்கள் அறியும் வகையில், பல ஆளுமைகளை ஒன்று திரட்டி, சென்னையில் உள்ள ராஜாஜி ஹாலில் வழக்கறிஞர் சு. சீனிவாசன் ஜியுடன் இணைந்து மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. தற்போதைய ஆர்.எஸ்.எஸ் அகில பாரத பொதுச்செயலாளரும், அப்போதைய ஏ.பி.வி.பி.யின் தென் மாநில அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்த தத்தாத்ரேய ஹொஸபாளே ஜி, கோவிந்தாச்சார்யா ஜியுடன் இணைந்து, தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து ஏ.பி.வி.பி.யின் வளர்ச்சிக்கு பல பணிகளை மேற்கொண்டனர்.
1992ல், ஏ.பி.வி.பி.யின் தமிழக அமைப்புச் செயலாளராக இருந்தபோது, குடும்ப சூழ்நிலை காரணமாக பிரச்சாரக் பொறுப்பில் இருந்து விலகி, வேலைக்கு செல்ல முடிவெடுத்தார்.
1994ல், “ப்ரோ மீடியா”, “மீடியா சர்கியூட்ஸ்” போன்ற நிறுவனங்களில் வேலை செய்தார். அதில் தேசத்திற்கு ஆதரவான செய்திகளை ஒன்று திரட்டி, எல்லா பத்திரிகைகளுக்கும் அனுப்பும் பணியை மேற்கொண்டார். சில சமயங்களில், கலவரங்களில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் விடுபடும், உண்மையான குற்றவாளிகளின் பெயர் யாருக்கும் தெரியாமல் இருக்கும், அதுபோன்ற சூழ்நிலையில், சம்பந்தப்பட்ட இடத்திற்கு பத்திரிக்கையாளர் குழுவாக நேரே சென்று, கலவரப் பகுதிகளில் துப்பறிந்து, சரியான நிகழ்வுகளை அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலையை செய்தார். இதன் மூலமாக, உண்மையான குற்றவாளியின் பெயர்களும், நடந்த நிகழ்வுகளும், மக்கள் அறிந்துகொள்ள நல்லதொரு வாய்ப்பாக இருந்தது.
2003ம் ஆண்டில் சென்னையில் உள்ள வியாசர்பாடி விவேகானந்தா பள்ளியில் அலுவலகப் பணியில் சேர்ந்து, 2020ம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார்.
1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 அன்று, அருணாசல சுந்தரவடிவு அம்மாளை திருமணம் செய்த ஆதித்தன் ஜிக்கு, சூர்யபிரபா என்ற மகளும், வைத்தியலிங்கம், மிருத்யுஞ்ஜெயன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த மகள் பிரபல தனியார் கல்லூரியில் இணைப் பேராசிரியராகவும், இரண்டு மகன்களும் பிரபல மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
மாணவர்களிடம் தேசபக்தியை வளர்த்து, தெய்வீகம் உணர்வை பரப்பி, மாணவர்களை தேசநலன் சார்ந்த சிந்தனையில் ஈடுபடுத்தி, நல்வழிகாட்டிய ஆதித்தன் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.
அ.ஓம்பிரகாஷ்