ஐயப்பன் குறித்து சர்ச்சை பேச்சு

தெலுங்கானாவின் விகாராபாத் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய நாத்திகரான பைரி நரேஷ், சுவாமி ஐயப்பன் குறித்து அவதூறாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, தெலுங்கானா முழுவதும் உள்ள பல்வேறு ஹிந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. பா.ஜ.க. மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பைரி நரேஷுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மதம், இனம், பிறப்பிடம், வசிப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல், மதம் அல்லது மத நம்பிக்கைகளை புண்படுத்தும் நோக்குடனான செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அறிந்த நரேஷ் தப்பியோடி தலைமறைவானார். இதனிடையே, ‘ஹிந்து தர்மம் மற்றும் ஹிந்து கடவுள்களை துஷ்பிரயோகம் செய்வது, புண்படுத்துவது நாட்டில் தற்போது பேஷன் ஆகி விட்டது. முறையாக சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்காத சூழலில், இதுபோன்ற விமர்சனங்களை தெரிவிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என தெலுங்கானா பா.ஜ.க தலைவர் பண்டி சஞ்சய் குமார் கூறியுள்ளார். அவர் மீது பக்தர்கள் பலர் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். தெலுங்கானாவில் நடைபெற்ற தொடர் போராட்டம் எதிரொலியாக சுவாமி ஐயப்பனுக்கு எதிராக அவதூறாக பேசிய பைரி நரேஷ் இரண்டு நாட்களுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார்.