திமுக எம்எல்ஏ மகன், மருமகளின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகளின் நீதிமன்றக் காவலை பிப்.23 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நீலாங்கரை போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லிமுன்பு, காணொலி காட்சி மூலமாக நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அதையடுத்து இருவரது நீதிமன்றக் காவலையும் பிப்.23 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.