கான்பூர் வன்முறையில் 36 பேர் கைது

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, முகமது நபியை அவதூறாகப் பேசியதாக கூறப்படும் விவகாரத்தில் அவருக்கு பல்வேறு முஸ்லிம் தரப்பினரிடம் இருந்து மிரட்டல்கள் வந்தன. இந்த சூழலில், உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் உள்ள பெகோங்கன்ஜ் மாவட்டத்தில் இதை காரணமாக காட்டி அங்குள்ள முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, அப்பகுதியில் கட்டாய கடையடைப்பு நடத்த அழைப்பு விடுத்தனர். போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டனர். காவல்துறை மற்றும் பொதுமக்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். வன்முறையை உடனடியாக காவல்துறையினர் கட்டுப்படுத்தினர். “இந்த வன்முறையில் குறைந்தது 6 பேர் காயமடைந்துள்ளனர். இவ்வழக்கில் மூன்று பிரிவுகளில் வழக்கை பதிவு செய்த காவல்துறையினர், 36 பேரை கைது செய்தனர். மேலும் பலரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. சதிகாரர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் அல்லது இடித்து தள்ளப்படும்” என்று காவல்துறை ஆணையர் விஜய் சிங் மீனா கூறினார். கான்பூரில் நடைபெறும் உத்தரபிரதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2022ல் நாட்டின் பல முன்னணி முதலீட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதற்காக பாரதப் பிரதமர் மோடி அங்கு சென்றிருந்தார். மேலும், குடியரசுத் தலைவரும் அங்குதான் இருக்கிறார். இந்நாளில் திட்டமிட்ட ரீதியில் இந்த வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது பல சந்தேகங்களை எழுப்புகிறது.