கொரோனா பரவல் குறையுமா?

சர்வதேச அளவில் கோவிட் பரவல் குறையாமல் உள்ளது குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், ‘உலக சுகாதார அமைப்பின் ஆறு மண்டலங்களில் ஐந்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. ஆப்ரிக்காவில் மரணமடைபவர்களின் விகிதம் கடந்த இரண்டு வாரங்களில் 30ல் இருந்து 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், தொற்று பரவல் வேகம் குறையவில்லை. உருமாறிய டெல்டா வகை வைரஸ், சமூக இடைவெளி இன்றி மக்கள் கூடுதல், ஊரடங்கில் பெரிய தளர்வுகள், தடுப்பூசி போடும் வேகம் அதிகரிக்காதது போன்ற காரணங்களால் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கிறது. முதன்முதலில் தோன்றிய வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் 3 பேருக்கு தொற்று ஏற்படும். ஆனால், டெல்டா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் மூலம் 8 பேருக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்’ என கூறினார்.