வானோர் புகழும் வாஞ்சிநாதன்

வாஞ்சிநாதன் (1886 – ஜூன் 17,1911) ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய தமிழகத்தை சேர்ந்த ஒரு புரட்சியாளர்.

திருநெல்வேலி செங்கோட்டையில், 1886ம் ஆண்டு பிறந்தவர். வாஞ்சிநாதனின் இயற்பெயர் சங்கரன் எனினும் இவர் வாஞ்சி என்றே அழைக்கப்பட்டார். வாஞ்சி பள்ளிப் படிப்பை செங்கோட்டையிலும், கல்லூரி படிப்பை திருவனந்தபுரத்திலும் பயின்றார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும், புனலூர் காட்டிலாகாவில் பணியாற்றினார்.

ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் உச்சகட்ட நிலையிலிருந்தது. வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு வாஞ்சியும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமானார். வாஞ்சிநாதன், புதுவையில் புரட்சியாளர் வ. வே. சு. ஐயர் வீட்டில் தங்குவது உண்டு. அங்கு மகாகவி பாரதியாரையும் சந்திப்பார்.

காலப்போக்கில் தமது அரசுப் பணியில் இருந்து விலகிப் புரட்சிப் பாதையில் தீவிரமானார். எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரியின் ரகசிய ரத்தப் புரட்சி பிரமாணங்களினால் வாஞ்சியின் மனம் மேலும் தீவிரம் அடைந்தது. 1911 ஜூன் 17 காலை 10.45 மணிக்கு மணியாச்சி ரயில் சந்திப்பில் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரையை வாஞ்சி தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டு வீரவமரணம் அடைந்தார்.

வாஞ்சியின் பிரேத விசாரணையில், அவர் போட்டிருந்த உள்சட்டையில் இருந்த துண்டுக் கடிதத்தில் கலெக்டரைச் சுட்டுக் கொன்றதற்கான காரணங்களில் ஒன்றாக ‘மிலேச்ச இங்கிலீஷ்காரர்கள் நம் அவர்கள் நம் பாரத நாட்டைக் கைப்பற்றியதோடு, ஹிந்துக்களின் சநாதன தர்மத்தை அழிக்கின்றனர்’ என குறிப்பிட்டிருந்தார். மேலும், சென்னையில் 3,000த்திற்கும் மேற்பட்ட விடுதலை வேட்கையுடைய தீவிரவாதிகள் தன்னுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டு ஆர். வாஞ்சி ஐயர், செங்கோட்டை என்றெழுதி இருந்தது. திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொலை வழக்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானது. செங்கோட்டையில் இவருக்கு ஒரு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு, டிசம்பர் 23, 2013 அன்று திறக்கப்பட்டுள்ளது.

வீரன் வாஞ்சிநாதனின் நினைவு தினம் இன்று

ப. கமலயாழினி