மனதின் குரல் 99ஆவது பகுதி

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் உங்களை மீண்டும் ஒருமுறை மனதார வரவேற்கிறேன். இன்று இந்த உரையாடலைத் தொடங்கும் வேளையில், என் மனதில் நிறைய உணர்வுகள் பிரவாகமாகப் பெருகிக் கொண்டிருக்கின்றன. மனதின் குரலுடனான நம்முடைய இந்த இனிமையான இணைவு, 99ஆவது பகுதியாக மலரவிருக்கிறது. பொதுவாக, 99ஆவது பகுதி என்பது மிகவும் கடினமானதாக இருக்கும் என்று கூறப்படுவதுண்டு. கிரிக்கெட்டிலே இதை நெர்வஸ் நைண்டீஸ், அதாவது பதட்டமான 90கள் என்றும் மிகவும் கடினமான படிக்கல்லாகப் பார்ப்பார்கள். ஆனால், பாரதத்தின் மக்களின் மனதின் குரல் எனும் போது, அங்கே அதற்கே உரித்தாக இருக்கும் உத்வேகம் என்பது அலாதியானது. அதே போல மனதின் குரலின் நூறாவது பகுதி குறித்து நாட்டுமக்களின் மத்தியில் பெரும் உற்சாகம் இருப்பது எனக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இன்று நாம் சுதந்திரத்தின் அமுதகாலத்தைக் கொண்டாடி வரும் வேளையில், புதிய உறுதிப்பாடுகளோடு முன்னேறி வரும் வேளையில், 100ஆவது மனதின் குரலின் பகுதி தொடர்பாக, உங்களுடைய கருத்துக்கள், ஆலோசனைகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன், தவிப்போடு காத்திருக்கிறேன். உங்களுடைய கருத்துக்களும், ஆலோசனைகளும் தான் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி ஒலிபரப்பாகவிருக்கும் 100வது பகுதி மனதின் குரலை நினைவில் கொள்ளத்தக்க விசேஷமானதாக ஆக்கக்கூடியது.

உடலுறுப்பு தானம்: மனதின் குரலில் நாம், பிறருக்கு சேவையாற்றவே தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த ஆயிரக்கணக்கான மனிதர்களைப் பற்றி உரையாடியிருக்கிறோம். பலர் எப்படிப்பட்டவர்கள் என்றால், பெண்களின் கல்விக்காகவே தங்களின் மொத்த ஓய்வூதியத்தையும் அளித்தவர்கள், சிலர் தங்களுடைய வாழ்க்கை முழுவதின் சம்பாத்தியத்தையும் சுற்றுச்சூழல் மற்றும் பிராணிகளின் சேவைக்காகவே அர்ப்பணம் செய்தவர்கள். நமது தேசத்திலே பொது நலனுக்கு மிக உயரிய இடம் அளிக்கப்பட்டிருக்கிறது, பிறர் நலன் பொருட்டு, தங்களுடைய அனைத்தையும் எந்த மறு சிந்தனையும் இல்லாமல் தானமளிப்பார்கள்.  ஆகையால் தானே நமக்கெல்லாம் சிறுவயதிலேயே சிபிச்சக்கரவர்த்தி, ததீசி போன்ற உறுப்பு தானம் புரிந்தவர்களின் கதைகள் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன.

நவீன மருத்துவ அறிவியலின் இந்தக் காலத்திலே, உறுப்பு தானம் என்பது யாரோ ஒருவருக்கு உயிர் அளிக்கக்கூடிய மிகப்பெரிய வழியாக ஆகியிருக்கிறது.  ஒரு நபர் இறந்த பிறகு தனது உடலை தானமளித்தால், அவரால் 8 முதல் 9 நபர்களுக்கு, புதிய ஒரு வாழ்க்கை கிடைப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.  நிறைவை அளிக்கும் விஷயம் என்னவென்றால், இன்று தேசத்திலே உறுப்பு தானத்தின்பால் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது என்பது தான்.  2013ஆம் ஆண்டிலே நமது தேசத்திலே, உடலுறுப்பு தானம் எனும் போது 5,000த்திற்கும் குறைவான அளவிலே தான் இருந்தது; ஆனால் 2022ஆம் ஆண்டிலே, இந்த எண்ணிக்கை அதிகரித்து 15,000 என்ற எண்ணிக்கையைத் தாண்டி விட்டது. உடலுறுப்பு தானம் செய்யும் நபர்கள், அவர்களுடைய குடும்பங்கள், இப்படிச் செய்வதன் மூலம் உண்மையிலே மிகவும் புண்ணியம் செய்திருக்கிறார்கள்.

கொடையளித்த குழந்தை: வெகுகாலமாகவே பெரிய புண்ணிய காரியங்கள் செய்வோரின் மனதின் குரலை அறிந்து கொள்ள வேண்டும், அவற்றை நாட்டுமக்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். அந்த வகையில் இன்றைய மனதின் குரலில் நம்மோடு அன்பே உருவான ஒரு சிறுமி அபாதத்தின் தந்தை சுக்பீர் சிங் சந்து, தாய் சுப்ரீத் கௌர் நம்மோடு இணைந்திருக்கிறார்கள். பஞ்சாபின் அமிர்தசரசில் வசித்து வருகிறது. ஏராளமான பிரார்த்தனைகளுக்குப் பிறகு, அவர்களுக்கு ஒரு அழகுச் சிலை, ஒரு செல்லப் பெண் பிறந்தாள்.  வீட்டிலிருந்தவர்கள் அவளுக்கு அபாபத் கௌர் என்று பெயரிட்டார்கள். அபாபத் பிறந்து வெறும் 39 தினங்களே ஆன போது அவள் இந்த உலகை நீத்துப் பேருலகுக்குப் பயணப்பட்டாள். ஆனால் சுக்பீர் சிங் சந்து அவர்களும், அவருடைய மனைவி சுப்ரீத் கௌர் இருவரும் அவர்களுடைய குடும்பத்தாரும் மிகவும் உத்வேகம் அளிக்கக்கூடிய தீர்மானத்தை மேற்கொண்டார்கள். 39 நாட்களே வாழ்ந்த அவர்களுடைய செல்லத்தின் உடல் உறுப்புக்களை தானம் அளிப்பது தான் அந்தத் தீர்மானம். (பிரதமர் அந்த குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் உரையாடினார்).

வாழ்வளித்த வள்ளல்: உடலுறுப்பு தானம் செய்யத் தூண்டும் நினைப்பு, நாம் மறையும் போது கூட, வேறு ஒருவருக்கு நல்லது நடக்கட்டும், ஒருவருடைய உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்ற மிகப்பெரிய ஆர்வம் தான். யாரெல்லாம் உறுப்பு தானத்திற்கான காத்திருப்பில் இருக்கிறார்களோ, காத்திருக்கும் ஒவ்வொரு கணத்தையும் கழிப்பது எத்தனை கடினமான காரியம் என்பதை அவர்கள் நன்கறிவார்கள். அப்படி ஒரு உடலுறுப்பு தானம் செய்யும் ஒருவர் கிடைத்து விட்டார் என்றால், அவர்களை இறைவனின் வடிவங்களாகவே பார்க்கிறார்கள். ஜார்க்கண்டில் வசிக்கும் ஸ்நேஹலதா சௌத்ரியும் கூட, இறைவனாகவே மாறி பிறருக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறார். 63 வயதான ஸ்நேஹலதா சௌத்ரி அவர்கள் தன்னுடைய இருதயம், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றைத் தானம் செய்த பிறகு மறைந்து விட்டார். (பிரதமர் அந்த குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் உரையாடினார்).

சட்டம், கொள்கைகள் மாற்றம்: நண்பர்களே, 39 நாட்களே நிரம்பிய அபாபத் கௌர் ஆகட்டும், 63 வயது நிரம்பிய ஸ்நேஹலதா சௌத்ரி ஆகட்டும், இவர்களைப் போன்ற கொடையாளிகள், வாழ்க்கையின் மகத்துவத்தை நமக்குப் புரிய வைத்து மறைந்து விட்டார்கள்.  நமது தேசத்திலே, இன்று, உடல் உறுப்புகள் தேவைப்படுபவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள், இவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், உடல் உறுப்பு தானம் செய்யும் யாரோ ஒருவருக்காகக் காத்துக் கிடக்கிறார்கள். அங்க தானத்தை எளிமையாக்கவும், அதை உற்சாகப்படுத்தவும், தேசத்தில் ஒரே மாதிரியான கொள்கை சட்டம் தொடர்பாக பணிகள் நடந்து வருகின்றன. இந்த நோக்கில் தான், அந்தந்த மாநிலத்திலே குடியிருக்க வேண்டும் என்ற விதியை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, இப்போது தேசத்தின் எந்த ஒரு மாநிலத்திற்கும் சென்று, நோயாளி உடலுறுப்பைப் பெற வேண்டிப் பதிவு செய்து கொள்ள இயலும். மேலும் அரசு, உடலுறுப்பு தானத்தின் பொருட்டு 65 வயதுக்கும் குறைவான வயது என்ற வயது வரம்பிற்கும் முடிவு கட்டி விட்டது. இந்த முயற்சிகளுக்கு இடையே, நாட்டுமக்களிடத்தில் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், உடலுறுப்பு தானம் செய்ய, அதிக எண்ணிக்கயில் மக்கள் முன்வர வேண்டும் என்பது தான். உங்களுடைய ஒரு தீர்மானம், பலரின் வாழ்வைக் காப்பாற்றும், வாழ்க்கையை உருவாக்கும்.

பெண்களின் சாதனை: இது நவராத்திரி காலம், சக்தியை உபாசனை செய்யும் நேரம் இது. இன்று, பாரதத்தின் வல்லமை, புதிய முறையில் சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது, இதிலே பெரிய பங்களிப்பு என்றால், நமது பெண்சக்தியுடையது. இன்றைய நிலையில், இப்படி பல எடுத்துக்காட்டுக்கள் வெளிப்பட்டிருக்கின்றன.  நீங்கள் சமூக ஊடகங்களில், ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட் சுரேகா யாதவ் அவர்களைக் கண்டிப்பாகப் பார்த்திருக்கலாம். சுரேகா அவர்கள், ஒரு சாகஸ வீராங்கனை என்ற வகையில் மேலும் ஒரு சாதனையைப் புரிந்திருக்கிறார். அவர், வந்தே பாரத் விரைவு ரயிலின் முதல் பெண் லோகோ பைலட்டாக அவர் ஆகி இருக்கிறார். இந்த மாதம் தான், தயாரிப்பாளர் குனீத் மோங்காவும் இயக்குநர் கார்த்திகீ கோன்ஸால்வேஸ் ஆகியோரின் ஆவணப்படமான ‘Elephant Whisperers’ ஆஸ்கார் விருதினை வென்று, இவர்கள் தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். தேசத்தின் மேலும் ஒரு சாதனை, பாபா அணு ஆய்வு மையத்தின் அறிவியலாளர், சகோதரி ஜோதிர்மயி மொஹந்தி சாதனை படைத்திருக்கிறார். ஜோதிர்மயிக்கு வேதியியலும், வேதியியல் பொறியியலும் என்ற துறையில் IUPACன் சிறப்பான விருது கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பாரதத்தின் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான பெண்கள் கிரிக்கெட் அணி, டி 20 உலகக் கோப்பையை வென்று புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. அதே போல அரசியலின் பால் நீங்கள் நோக்கினால், ஒரு புதிய தொடக்கம் நாகாலாந்திலே நிகழ்ந்திருக்கிறது. நாகாலாந்திலே, 75 ஆண்டுகளில் முதன்முறையாக, இரண்டு பெண் உறுப்பினர்கள் சட்டப்பேரவைத் தேர்தல்களிலே ஜெயித்து மன்றத்தில் நுழைந்திருக்கிறர்கள். இவர்களில் ஒருவரை நாகாலாந்து அரசு அமைச்சராகவும் ஆக்கியிருக்கிறது. அதாவது, மாநிலத்தின் மக்களுக்கு முதன்முறையாக ஒரு பெண் அமைச்சர் கிடைத்திருக்கிறார்.

ராணுவத்தில் பெண்கள்: சில நாட்கள் முன்பாக, துருக்கியிலே பேரிடர் ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் பெருநாசத்திற்கிடையே அங்கிருக்கும் மக்களுக்கு உதவிபுரிய சென்றிருந்த சாகஸமான வீராங்கனைகளைச் சந்திக்க நேர்ந்தது. அவர்களுடைய சாகஸம், அவர்களின் திறமைகள் ஆகியன பற்றி உலகமே பாராட்டி வருகிறது.  பாரதம், ஐ.நா மிஷன் என்ற முறையில் அமைதிப்படையில் பெண்கள் மட்டுமே பிரிவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. இன்று, தேசத்தின் பெண்கள், நமது முப்படைகளிலும், தங்களுடைய வீரத்தின் வெற்றிக் கொடியை ஓங்கிப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். குரூப் கேப்டன் ஷாலிஜா தாமி, போர்ப்பிரிவில், ஆணை பிறப்பிக்கும் தகுதி படைத்த முதல் பெண் விமானப்படை அதிகாரியாக ஆகியிருக்கிறார். அவரிடம் கிட்டத்தட்ட 3,000 மணிநேரம் விமானத்தை ஓட்டிய அனுபவம் இருக்கிறது.  இதைப் போலவே இந்திய ராணுவத்தின், நெஞ்சுரம் மிக்க கேப்டன் சிவா சௌஹானும், சியாச்சினிலே பணியாற்றும் முதல் பெண் அதிகாரியாக ஆகியிருக்கிறார். பூஜ்யத்திற்குக் கீழே 60 டிகிரி செல்ஷியஸ் என்ற பருவநிலை இருக்கும் சியாச்சினிலே, ஷிவா, மூன்று மாதங்களுக்குப் பணியாற்றுவார். நண்பர்களே, இந்தப் பட்டியல் எத்தனை நீளமானது என்றால், இங்கே இதுபற்றிய விவாதம் கூட கடினமாக இருக்கும்.  இப்படிப்பட்ட பெண்கள், நமது பெண் செல்வங்கள், இன்று, பாரதம் மற்றும் பாரதத்தின் கனவுகளுக்கு சக்தியளித்து வருகிறார்கள்.  பெண்சக்தியின் இந்த ஆற்றல் தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயுவாகும்.

சூரிய சக்தி: இப்போதெல்லாம் உலகம் முழுவதிலும் தூய்மையான எரிசக்தி, புதுப்பிக்கவல்ல எரிசக்தி பற்றி நிறைய பேசப்படுகின்றன. உலக மக்களை நான் சந்திக்கும் போது, இந்தத் துறையில் பாரதத்தின் சாதனைபடைக்கும் வெற்றியைப் பற்றிக் கண்டிப்பாக முன்வைக்கிறேன். குறிப்பாக, பாரதம், சூரியசக்தித் துறையில் எந்த வகையில் விரைவாக முன்னேறி வருகிறது என்பதே கூட ஒரு மிகப் பெரிய சாதனையாகும். பாரத நாட்டு மக்கள், பல நூற்றாண்டுகளாகவே சூரியனோடு விசேஷமான தொடர்பு கொண்டவர்கள். நமது நாட்டிலே, சூரியசக்தி தொடர்பாக இருக்கும் விஞ்ஞானப் புரிதல், சூரிய உபாசனை தொடர்பான பாரம்பரியங்கள் ஆகியன, பிற இடங்களிலே குறைவானவையாகவே காணப்படுகின்றன. இன்று, நாட்டுமக்கள் அனைவரும் சூரிய சக்தியின் மகத்துவத்தைப் புரிந்து கொள்கிறார்கள், தூய்மையான எரிசக்தி தொடர்பாகத் தங்களுடைய பங்களிப்பை அளிக்க விரும்புகிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அனைவரின் முயற்சி என்பதன் இந்த உணர்வு தான் பாரதத்தின் சூரியத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் புனேயில், இப்படிப்பட்ட ஒரு அருமையான முயல்வு, என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இங்கே MSR-Olive Housing Society யைச் சேர்ந்தவர்கள் சமூகத்தவர்க்குக் குடிநீர், லிஃப்ட், விளக்குகள் போன்ற சமூகப் பயன்பாட்டு விஷயங்களைப் பொறுத்த மட்டிலே, சூரியசக்தியையே பயன்படுத்துவோம் என்று தீர்மானித்தார்கள். இதன் பிறகு இந்த குடியிருப்பு சமூகத்தினர் அனைவரும் இணைந்து சூரியத் தகடுகளைப் பொருத்தினார்கள். இன்று இந்த சூரியத் தகடுகள் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் சுமார் 90,000 கிலோவாட் மணியளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வோர் மாதமும் கிட்டத்தட்ட 40,000 ரூபாய் சேமிக்கப்படுகிறது. இந்தச் சேமிப்பின் ஆதாயம் சமூகத்தின் அனைவருக்கும் கிடைக்கிறது.

புனேவைப் போலவே தமன் – தீவில் இருக்கும் தீவ் பகுதி ஒரு வித்தியாசமான மாவட்டம்; அங்கே இருப்போரும் ஒரு அற்புதமான செயலைப் புரிந்திருக்கிறார்கள். பகல் பொழுதின் அனைத்துத் தேவைகளுக்கும் 100 சதவீதம் தூய்மையான எரிசக்தியைப் பயன்படுத்தும் பாரதத்தின் முதல் மாவட்டம் தீவ் என்று ஆகியிருக்கிறது. தீவ் பகுதியின் இந்த வெற்றியின் மந்திரம், அனைவரின் முயற்சியே ஆகும். அவர்கள் இந்தச் சூரியத் திட்டம் வாயிலாக, மின்சாரம் வாங்க ஆன செலவு கிட்டத்தட்ட, 52 கோடி ரூபாய் இப்போது சேமிக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழலும் பெரிய அளவில் பாதுகாக்கப்படுகிறது. இப்படிப்பட்ட முயல்வுகள் நாடெங்கிலும், மேலும் பல இடங்களிலும் நடந்து வருகின்றன. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை விஷயத்தில் பாரத மக்கள் எத்தனை புரிந்துணர்வு உடையவர்கள் என்பது இதிலிருந்து நன்கு விளங்குகிறது. மேலும், நம்முடைய தேசம், எந்த வகையில் எதிர்காலத் தலைமுறையினருக்காக விழிப்போடு செயல்படுகிறது என்பதும் தெளிவாகிறது.

சௌராஷ்டிர தமிழ் சங்கமம்: நமது தேசத்திலே, காலத்திற்கு ஏற்ப, சூழ்நிலைக்கு ஏற்றவகையிலே, பல பாரம்பரியங்கள் மலர்ந்திருக்கின்றன. இந்த பாரம்பரியங்கள் தாம், நமது கலாச்சாரத்தின் வல்லமையை அதிகரிக்கின்றன, இதைப் புத்தம்புதிதாக என்றும் துலங்கும்படி இருக்கத் தேவையான பிராணசக்தியை அளிக்கின்றன.  சில மாதங்களுக்கு முன்னால் தான், இப்படிப்பட்ட ஒரு பாரம்பரியம் காசியிலே தொடங்கப்பட்டது. காசி தமிழ்ச் சங்கமத்திலே, காசி மற்றும் தமிழ்நாட்டிற்கும் இடையே, பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் வரலாற்று மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் கொண்டாடப்பட்டன.  ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வு நமது தேசத்திற்கு பலத்தை அளிக்கிறது. நாம் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் அறிந்து கொள்ளும் போது, கற்கும் போது, ஒற்றுமை உணர்வு மேலும் ஆழமாகப் பாய்கிறது. ஒற்றுமையின் இந்த உணர்வோடு கூடவே, அடுத்த மாதம் குஜராத்தின் பல்வேறு பாகங்களிலும் சௌராஷ்ட்ர தமிழ்ச் சங்கமம் நடைபெற இருக்கிறது. சௌராஷ்ட்ர தமிழ் சங்கமம், ஏப்ரல் 17 முதல் 30 வரை நடக்கும். மனதின் குரலின் சில நேயர்கள் கண்டிப்பாக யோசித்துக் கொண்டிருப்பார்கள், குஜராத்தின் சௌராஷ்டிரத்துக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே என்ன தொடர்பு இருக்க முடியும்? என்று. பல நூற்றாண்டுகள் முன்னரே கூட, சௌராஷ்டிரத்தின் பலர் தமிழ்நாட்டின் பல்வேறு பாகங்களில் குடியேறியிருக்கின்றார்கள். இவர்களை இன்றும் கூட சௌராஷ்ட்ரீ தமிழர்கள் என்ற பெயரிட்டு அழைக்கிறார்கள். அவர்களுடைய உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, சமூகப் பழக்கங்கள் ஆகியவற்றில், இன்றும் கூட ஆங்காங்கே சௌராஷ்டிரத்தின் சில அம்சங்கள் இணைகின்றன. இந்த நிகழ்ச்சியை மெச்சி, தமிழ்கத்தைச் சேர்ந்த பலர் கடிதங்களை எழுதியிருக்கிறார்கள்.  மதுரையில் வசிக்கும் ஜயச்சந்திரன் அவர்கள், ஒரு நீண்ட, உணர்வுப்பூர்வமான விஷயத்தை எழுதியிருக்கிறார்.  “ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முறையாக ஒருவர் சௌராஷ்டிர தமிழர்களின் இந்த உறவுகளைப் பற்றி எண்ணமிட்டிருக்கிறார், சௌராஷ்டிரத்திலிருந்து தமிழ்நாட்டில் வந்து குடியேறியிருப்பவர்கள் பற்றி விசாரித்திருக்கிறார்” என்று எழுதியிருக்கிறார். ஜயச்சந்திரன் அவர்களின் இந்தச் சொற்கள், ஆயிரக்கணக்கான தமிழ் சகோதர சகோதரிகளின் வெளிப்பாடு.

கின்னஸ் சாதனை: நான் அசாமோடு தொடர்புடைய ஒரு செய்தியைப் பற்றிக் கூற விரும்புகிறேன்.  இதுவும் கூட, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வுக்கு பலம் சேர்க்கிறது.  நமது வீர லாசித் போர்ஃபுகன் அவர்களின் 400ஆவது பிறந்த நாளை நாம் கொண்டாடி வருகிறோம். வீரர் லாசித் போர்ஃபுகன், முகலாய ஆட்சியின் கொடூரமான பிடியிலிருந்து, குவாஹாத்திக்கு விடுதலை பெற்றுத் தந்தார். இன்று தேசம், இந்த மாபெரும் வீரனின் அசகாய சூரத்தனத்தைத் தெரிந்து கொண்டு வருகிறது. சில நாட்கள் முன்பாக, லாசித் போர்ஃபுகனின் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்ட கட்டுரை எழுதும் இயக்கம் நடத்தப்பட்டது. இதற்கு கிட்டத்தட்ட 45 இலட்சம் மக்கள் கட்டுரைகளை அனுப்பியிருந்தார்கள். அதே வேளையில் இது ஒரு கின்னஸ் உலக சாதனைப் பதிவையும் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் மிகவும் பெரிய விஷயம், அதிக உவகையைத் தரும் விஷயம் என்னவென்றால், வீர லாசித் ப்போர்ஃபுகன் மீது எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் கிட்டத்தட்ட 23 பல்வேறு மொழிகளில் எழுதி அனுப்பப்பட்டிருக்கிறது. இவற்றில், அசாமியா மொழியைத் தவிர, ஹிந்தி, ஆங்கிலம், பாங்க்லா, போடோ, நேபாளி, சம்ஸ்கிருதம், சந்தாலி போன்ற மொழிகளைச் சேர்ந்த மக்கள் கட்டுரைகளை அனுப்பியிருக்கிறார்கள். நான் இந்த முயற்சியில் பங்கெடுத்த அனைவருக்கும் என் இதயப்பூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தால் ஏரியில் புதிய முயற்சி: கஷ்மீரம் அல்லது ஸ்ரீநகர் பற்றிய விஷயம் எனும் போது, அங்கிருக்கும் பள்ளத்தாக்குகள், தால் ஏரி ஆகியவற்றின் சித்திரங்கள் நம் கண் முன்னே வந்து போகும். நம்மில் அனைவருமே தால் ஏரியின் சுந்தரக் காட்சிகளின் ரம்மியத்தை அனுபவிக்க விரும்புவோம்; ஆனால், தால் ஏரியில் மேலும் ஒரு சிறப்பான விஷயம் உண்டு. இந்த ஏரி, தனது சுவையான தாமரைத் தண்டுகளுக்காகப் பெயர் போனது. தாமரைத் தண்டுகளை தேசத்தின் பல்வேறு இடங்களில், பல்வேறு பெயர்களிட்டு அழைப்பார்கள். கஷ்மீரத்தில் இவற்றை நாதரூ என்றழைப்பார்கள்.  கஷ்மீரத்தின் நாதரூவுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தத் தேவையைக் கருதிப் பார்த்து, தால் ஏரியின் நாதரூவைப் பயிர் செய்ய விவசாயிகள் ஒரு விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்பினை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.  இந்த அமைப்பிலே கிட்டத்தட்ட 250 விவசாயிகள் இணைந்திருக்கிறார்கள். இன்று இந்த விவசாயிகள், தங்களின் நாதரூவை அயல்நாடுகளுக்கு அனுப்பத் தொடங்கி விட்டார்கள். சில நாட்கள் முன்பு தான் இந்த விவசாயிகள், இரண்டு தொகுதிப்புகளை ஐக்கிய அரபு எமிரேட்டுகளுக்கு அனுப்பியிருக்கிறார்கள். இந்த வெற்றி கஷ்மீருக்குப் பெயரை ஈட்டிக் கொடுப்பதோடு, பல விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்கிறது.

லேவண்டர் மலர் சாகுபடி: ஜம்மு கஷ்மீரத்தின் தோடா மாவட்டத்தின் ஒரு பகுதி தான் பதர்வாஹ். இங்கே இருக்கும் விவசாயிகள், பல தசாப்தங்களாக, மக்காச்சோளத்தின் பாரம்பரியமான விவசாயத்தைச் செய்து வந்தார்கள்; ஆனால், சில விவசாயிகள், சற்று வித்தியாசமானதைச் செய்ய யோசித்தார்கள். அவர்கள் மலர் சாகுபடியில் ஈடுபட்டார்கள். இன்று, இங்கே, கிட்டத்தட்ட 2,500 விவசாயிகள், லேவண்டர் மலர் சாகுபடி செய்யத் தொடங்கி விட்டார்கள். இவர்களுக்கு மத்திய அரசின் அரோமா மிஷன் மூலம் உதவிகள் கிடைத்து வருகின்றது. இந்தப் புதிய விவசாயமானது, விவசாயிகளின் வருமானத்தில் பெரிய ஏற்றத்தை அளித்து, இன்று லேவண்டரோடு சேர்த்து, இவர்களின் வெற்றியின் மணமும், தொலைதூரங்கள் வரை பரவிக் கொண்டிருக்கிறது.

சாரதாதேவி ஆலயம்: கஷ்மீரம் பற்றிப் பேசும் போது, தாமரை பற்றிப் பேசும் போது, தாமரை மலர் மீது வீற்றிருக்கும் அன்னை சாரதை பற்றிய நினைவு வருவது மிகவும் இயல்பான விஷயம் இல்லையா!! சில நாட்கள் முன்பாகத் தான், குப்வாடாவில் அன்னை சாரதைக்கு ஒரு அருமையான ஆலயம் மக்கள் வழிபாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. முன்னொரு சமயத்தில், சாரதா பீடத்தை தரிசிக்க மக்கள் சென்று வந்த அதே பாதையில் தான் இந்த ஆலயம் இப்போது எழுப்பப்பட்டிருக்கிறது. உள்ளூர் மக்கள் இந்தக் கோயில் கட்டுமானத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். இந்த சுபகாரியத்தில் ஈடுபட்ட, ஜம்மு கஷ்மீரத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் பலப்பல வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த முறை, மனதின் குரலின் 100ஆவது பகுதியில் உங்களை நான் சந்திக்கிறேன். நீங்களனைவரும், உங்களின் ஆலோசனைகளை அவசியம் அனுப்புங்கள். மார்ச் மாதத்தின் இந்த மாதத்தில், நாம், ஹோலி தொடங்கி நவராத்திரி வரை, பல நிகழ்ச்சிகளிலும் பண்டிகைகளிலும் ஈடுபட்டு இருப்போம். ரமலான் புனித மாதமும் தொடங்கவிருக்கிறது. இன்னும் சில நாட்களில் ஸ்ரீ ராம நவமி திருநாளும் வரவிருக்கிறது. இதன் பிறகு மஹாவீர் ஜயந்தி, புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை ஆகியவையும் வரும். ஏப்ரல் மாதத்தில் நாம், பாரதத்தின் இரண்டு மாபெரும் ஆளுமைகளின் பிறந்த தினங்களைக் கொண்டாட இருக்கிறோம். மஹாத்மா ஜோதிபா புலே, பாபா சாஹேப் ஆம்பேத்கர் ஆகியோர் தாம் இந்த இருபெரும் ஆளுமைகள். இந்த இரண்டு மாமனிதர்களும், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளுக்கு முடிவு கட்ட, அசாத்தியமான பங்களிப்புக்களை நல்கினார்கள். இன்று, சுதந்திரத்தின் அமுதக்காலத்தில், இப்படிப்பட்ட மாமனிதர்களிடமிருந்து கற்கவும், தொடர்ந்து உத்வேகமடைவதும் அவசியமாகிறது. நாம் நமது கடமைகளை, அனைத்திலும் முதன்மையானவையாகக் கொள்ள வேண்டும். இப்போது சில இடங்களில், கொரோனா அதிகரித்து வருகிறது. ஆகையால் நீங்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும், தூய்மை பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும். அடுத்த மாதம், மனதின் குரலின் 100ஆவது பகுதியில், நாம் மீண்டும் இணைவோம், அதுவரை விடை தாருங்கள் அன்புநிறை நாட்டுமக்களே, நன்றி, வணக்கம்.