கோயில்களை புனரமைக்க வேண்டும்

டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஆர்கனைசர் பாஞ்சன்யா மீடியா மாநாட்டில்” பங்கேற்று பேசிய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், ‘கோவாவில் போர்த்துகீசியர்களால் சேதப்படுத்தப்பட்ட கோயில்களை புனரமைக்க வேண்டும். இன்றுவரை, கோவாவுக்கு  வரும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரைகளுக்கு மட்டுமே ஈர்க்கப்பட்டனர்.  ஆனால் இப்போது அவர்களை கோயில்களுக்கும் அழைத்துச் செல்வது எங்கள் கடமை. கோயில்கள் புனரமைப்புக்கு பட்ஜெட்டில் ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளாக கோவாவால் சாதிக்க முடியாததை, 2012 முதல் 2022 வரை நாங்கள் சாதித்துள்ளோம், விரைவில் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக இது இருக்கும்’ என கூறினார். மேலும், அனைத்து மாநிலங்களிலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறிய கருத்தை வலியுறுத்திய பிரமோத் சாவந்த், கோவா விடுதலை பெற்றதில் இருந்தே அதை பின்பற்றி வருகிறது என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன். மற்ற மாநிலங்களும் இதை அமல்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்’ என்று கூறினார். முன்னதாக பேசிய உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ‘சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வரப்படும். அதை செயல்படுத்த ஒரு வரைவு மசோதாவைத் தயாரிக்க ஒரு குழு அமைக்கப்படும். நாட்டின் பிற மாநிலங்களும் அந்தந்த மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’ என யோசனை தெரிவித்தார்.