கோயில் அதிகாரிகளே பொறுப்பு

கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் கோயில்களுக்காகவே பயன்படுத்த வேண்டும். ஆனால், பல இடங்களில் அப்படி நடைபெறுவதில்லை. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இதில் பல முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். அவ்வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, அனுமந்தராய சுவாமி கோயில் உட்பட ஏழு கோயில்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்களில் அதிகாரிகளின் உதவியுடன் சட்டவிரோத குவாரி நடத்தி கொள்ளை அடிக்கப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்தக்கோரி ராமகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கு விசாரணையின்போது, இக்குற்றச்சாட்டுகள் பற்றி அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சட்ட விரோத குவாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பு கூறியது. இதனை தொடர்ந்து கோயில் நிலங்களில் நடைபெறும் சட்டவிரோத குவாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி ஆய்வுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆணையிட்டது. மேலும், கோயில் சொத்துக்களை முறையாக பராமரிக்காத அதிகாரிகளே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்தது.