ராகுலுக்கு நாடு விடைகொடுத்தது

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அரசு ஊழியரான ராகுல் பட் என்ற காஷ்மீரி பண்டிட், காஷ்மீரின் சதூரா கிராமத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இரண்டு முஸ்லிம் பயங்கரவாதிகள் கொடூரமாக சுட்டுக் கொன்றனர். தகவல் அறிந்த காஷ்மீர் பண்டிட் சமுதாயத்தினர், பல்வேறு இடங்களில் இரவு முதல் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். சாலை மறியல், பேரணி போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், ராகுலின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. அப்போது அங்கிருந்தவர்கள், “ராகுல் பட் அமர் ரஹே” மற்றும் “பாகிஸ்தான் முத்ரபாத்” கோஷங்களை எழுப்பி ராகுலுக்கு அஞ்சலி செலுத்தினர். “புத்காமில் பயங்கரவாதிகளால் ராகுல் பட் காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த வெறுக்கத்தக்க பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் தண்டிக்கப்படுவார்கள். துக்ககரமான இந்த நேரத்தில், ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் ராகுலின் குடும்பத்தினருடன் உறுதுணையாக நிற்கிறது” என்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.