மலாலி கோயிலில் தாம்பூல பிரசன்னம்

கர்நாடகாவின் மங்களூருவின் புறநகர் பகுதியான மலாலியில் உள்ள பழைய மசூதியின் புனரமைப்புப் பணியின் போது அங்கு கோயில் போன்ற அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு முன்பு கோயில் இருந்ததா, எந்த கோயில், அதனை இடித்தவர்கள் யார், எப்போது இடிக்கப்பட்டது என அதன் வரலாற்றையும் உண்மைத் தன்மையையும் அறியும் ஆர்வம் அப்பகுதி மக்களிடயே எழுந்துள்ளது. இந்த சூழலில், தேன்குலிபாடியில் உள்ள ஸ்ரீ ராமாஞ்சநேய பஜனை மந்திர மடத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) மற்றும் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் ‘தாம்பூல பிரசன்னம் என்ற சடங்கை நிகழ்த்தினர். குறிப்பிட்ட இடத்தில் ஏதேனும் தெய்வீக சக்திகள் உள்ளதா என்பதை அறிய ஜோதிடம் மூலம் கண்டறிய தாம்பூல பிரசன்னம் பார்க்கப்படுகிறது. இதில் நேர்மறையான பதில் வரும்போது, ​​‘அஷ்டமங்கல பிரசன்னம்’  என்ற சடங்கு செய்யப்படும். ‘காலை 8:30 மணி முதல் 11 மணி வரை நடந்த இந்த சடங்கைத் தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காவலர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அந்த கிராமவாசிகளும் அசம்பாவிதம் நடக்காமல் பார்த்துக் கொண்டுள்ளனர். இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் இதுகுறித்து போராட ஒப்புக்கொண்டுள்ளனர்’ என்று மங்களூரு காவல்துறை ஆணையர் என்.எஸ்.குமார் தெரிவித்தார். இதற்கிடையில், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் பரத் ஷெட்டி, “அந்த கட்டுமான இடத்தில் தொல்லியல்துறை ஆய்வு நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். இது குறித்து கருத்து பதிவிட்ட அவர், மலாலியில் சர்ச்சைக்குரிய இடத்தின் பிரச்சினை என்பது அரசியல் பிரச்சினை அல்ல, சமூக பிரச்சினை, இது நமது வரலாற்றை மீண்டும் தேடி கண்டுபிடிப்பது, நாங்கள் எதையும் கோரவில்லை. ஆனால், உண்மையை மீட்டெடுப்போம் என்று நம்புகிறோம். ஆய்வு நட்த்தப்பட்டு அந்த உண்மையை உலகம் அறியட்டும். தொல்லியல் துறை ஆய்வு 1991 வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை எவ்வகையிலும் மீறாது” என்று தெரிவித்திருந்தார்.