விண்வெளித்துறையில் ஸ்டார்ட் அப்

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் திங்களன்று “பாதுகாப்பான மற்றும் நிலையான செயல்பாட்டிற்கான இஸ்ரோ அமைப்பு” (IS4OM) ஐ மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார். IS4OM கட்டுப்பாட்டு மையம், இந்திய விண்வெளிச் சொத்துக்களைப் பாதுகாக்கும் அனைத்து வழக்கமான செயல்பாடுகளுக்கும், குறிப்பிட்ட மோதலைத் தவிர்க்கும் உபாயங்கள் மூலம் விண்வெளிப் பொருட்களிலிருந்து ஏற்படும் மோதல் அச்சுறுத்தல்களைத் தணிக்கும். அப்போது பேசிய அமைச்சர், மத்திய அரசு அண்மையில் இந்திய விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதித்த பிறகு, இஸ்ரோவிடம் சுமார் 60 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன; இவற்றில் சில நிறுவனங்கள் விண்வெளியில் சிதறிக் கிடக்கும் கழிவு மேலாண்மை தொடர்பானவை. மற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், நானோ செயற்கை கோள், செலுத்து வாகனம், தரைக்கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி சார்ந்தவையாகும். அகமதாபாத்தில் ‘இன் ஸ்பேஸ்’ தலைமையகத்தை கடந்த மாதம் திறந்து வைத்த பிரதமர், அரசின் விண்வெளி நிறுவனங்களின் வலிமையும், பாரதத்தில் உள்ள தனியார் துறையினரின் ஆர்வமும் ஒன்றிணைந்தால், வானம் கூட, எல்லையாக இருக்கமுடியாது என்று கூறியிருந்தார். தனியார் துறையினரின் ஆர்வத்துடன், புதுமை ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இணைந்து  விண்வெளியில் இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதில் விண்வெளி துறையின் பங்களிப்பு அதிகரிக்கும்’ என்று குறிப்பிட்டார்.