ஹிந்துக்களுக்கு எதிரான பேச்சு

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடந்த தர்ம சன்சத் மாநாட்டில், முஸ்லிம்களுக்கு எதிராக பேசப்பட்டதாகக் கூறப்படும் பேச்சுகள் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ளக்கோரி, ஹிந்து சேனா, நீதிக்கான ஹிந்து முன்னணி என்ற இரண்டு ஹிந்து அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஹிந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா தாக்கல் செய்துள்ள மனுவில், ஹரித்துவார் மாநாட்டில் ஹிந்து தலைவர்களின் பேச்சுகள் என்பது ஹிந்து மதத்துக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களுக்கான பதில்கள் தான், அவை வெறுப்புப் பேச்சுகள் அல்ல. ஹிந்து ஆன்மிக தலைவர்கள் மீது அவதுாறு ஏற்படுத்தும் நோக்கிலேயே அவர்களது பேச்சுகள் வெறுப்பு பேச்சுகளாக சித்தரிக்கப்படுகிறது. அசாதுதீன் ஓவைசி, வாரீஸ் பதான் உள்ளிட்ட பலர் எப்போதும் ஹிந்துக்களுக்கு எதிராக வெறுப்பை துாண்டும் வகையில் பேசி வருகின்றனர். அவர்களை முதலில் கைது செய்ய வேண்டும்’ என கோரியுள்ளார். நீதிக்கான ஹிந்து முன்னணி அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில், ‘முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்துள்ளது. அதேபோல் ஹிந்துகளுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளையும் உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.