ஆறும் ஆன்மிகமும்

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?

அப்போது ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனால் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. ஆற்றில் பாய்ந்தது… நீந்த ஆரம்பித்தது.

இதைப் பார்த்த இருவரில் ஒருவன், ஆற்றில் குதித்தான். காளை மாட்டின் வாலை பிடித்துக்கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச்சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.

அடுத்தவன் பார்த்தான், நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா…

இப்போது, ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இவனும் ஆற்றில் குதித்து நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். அவனை இழுத்துக்கொண்டு நாயால் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்… வாள்’ என்று கத்த ஆரம்பித்தது. இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் போக வேண்டிய திசையோ வேறு.

மற்றொரு சம்பவத்தில்,

ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது. உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற ஆசையில் ஒருத்தன் நீந்திச் சென்று அதைப் பற்றுகிறான். நீண்ட நேரமாக கரை திரும்பவில்லை. நடு ஆற்றில் போராடுகிறான். கரையில் நின்று கொண்டிருக்கும் அவன் நண்பர்கள் கத்துகிறார்கள்… ‘‘நண்பா… மூட்டையை இழுத்துக் கொண்டு உன்னால் வர முடியவில்லை என்றால் அதை விட்டுவிடு!’’ என்று

ஆற்றின் நடுவே இருந்து அவன் அலறுகிறான்: ‘‘நான் இதை எப்பவோ விட்டுவிட்டேன்… இப்போ இதுதான் என்னை விடமாட்டேங்குது, . ஏன்னா, இது கம்பளி மூட்டை இல்லே. கரடிக் குட்டி!’’

கரை சேர நினைக்கும் மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள். சிலரோ கரடிக் குட்டியை…

ஆன்மிகம் என்ன சொல்கிறது? நீங்கள் கரை சேர விரும்பினால், எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள். ஏற்கெனவே பற்றிக் கொண்டிருப்பதை விட்டு விடுங்கள்! தவறாகப் பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகிறார்கள். சரியாகப் பற்றுகிறவர்கள், கரையேறி விடுகிறார்கள். பற்றையே விடுகிறவர்கள், கடவுளாகி விடுகிறார்கள்!

 

ஜெ. பிரேம குமாரி