மாநிலங்களுக்கு மானிய விலையில் பருப்பு

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், விலை ஆதரவுத் திட்டம், மற்றும் விலை நிலைப்படுத்தும் நிதியத்தின் கீழ் கொள்முதல் செய்யப்பட்ட பருப்பு இருப்பை, பல்வேறு நலத் திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்காக, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கீடு செய்யவும், துவரை, உளுந்து, மசூர் பருப்புகளை கொள்முதல் செய்வதற்கான வரம்பை தற்போதைய 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின்கீழ், மாநில அரசுகள், 15 லட்சம் மெட்ரிக் டன் பருப்புகளை, ஆதார மாநிலத்தின் விற்பனை விலையிலிருந்து ஒரு கிலோ ரூ. 8 வீதம் தள்ளுபடி விலையில், முதலில் வருவோர்க்கு முதலில் ஒதுக்கீடு என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும். தத்தமது மாநிலங்களில் செயல்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டம், பொது வினியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் போன்றவற்றுக்கு, இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டம் 12 மாத காலத்திற்கு அல்லது 15 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு காலியாகும் வரை செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ. 1,200 கோடி செலவிட உள்ளது.