வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசுத் தொகை?

தஞ்சை மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் பொருட்களை வெளி மாநிலங்களில் வாங்காமல் தமிழக விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அரசு தரப்பு, ‘‘பொங்கலுக்கு குறுகிய காலமே இருப்பதால் பணத்தை வங்கிக் கணக்குகளில் செலுத்துவது கடினம். சில வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகை எனக் கூறி பணத்தை பிடித்தம் செய்ய வாய்ப்புள்ளது. இதனால் மக்களுக்கு பயனில்லாமல் போய்விடும். 3 வகையான குடும்ப அட்டைகள் இருப்பதால் அவற்றை பிரிப்பதில் சிக்கல் உள்ளது’’ என தெரிவித்தது. அதற்கு நீதிபதிகள், மின் இணைப்புகளுடன் ஆதார் இணைக்கும் பணியைப்போல் இந்தப்பணியையும் தமிழக அரசு செய்தால் என்ன? எனக் கேள்வி எழுப்பினர்.பின்னர் பொங்கல் பரிசுத் தொகையை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த முடியுமா? என்பது குறித்து அரசிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை இன்று (ஜனவரி 4) தள்ளிவைத்தனர்.