என்.ஐ.ஏ சோதனை

மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்ய முயன்ற காவலர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் மயிலாடுதுறையை சேர்ந்த சாதிக் பாஷா, ஜாபர் அலி, கோவையை சேர்ந்த முகமது ஆஷிக், காரைக்காலை சேர்ந்த முகமது இர்பான், சென்னையை சேர்ந்த ரஹ்மத் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் உள்ள இந்த கும்பலுக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாகவும் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது. சாதிஷ் பாஷாவும் அவரது கூட்டாளிகளும் சமூக வலைதளம் வாயிலாக ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்ததும், பல இடங்களில் ரகசிய கூட்டங்கள் நடத்தி துண்டு பிரசுரங்களை வழங்கி வந்ததும் என்.ஐ.ஏ விசாரனையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டை, மண்ணடி, மயிலாடுதுறை, காரைக்கால், கோவை உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த கும்பலுக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் நேரடி தொடர்பு உள்ளதா, இவர்கள் கூட்டம் நடத்த நிதி உதவி எங்கிருந்து பெறப்படுகிறது, இவர்களுக்கு பின்னணியில் இருக்கும் நபர்கள் யார், துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இவர்களுக்கு வழங்கியது யார், அதற்கான ஆவணங்கள், ஆதாரங்களைத் திரட்டும் பணியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஈடுபட்டனர்.