ஹிந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து

பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வினி உபாத்யாயா, 2020ல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ‘ஜம்மு காஷ்மீர், லடாக், லட்சத்தீவு, மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், உள்ளிட்ட சில மாநிலங்களில் மற்ற மதத்தினரைவிட ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அம்மாநிலங்களில் ஹிந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். இவ்வழக்கில் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை சார்பில் முதலில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், ‘ஹிந்துக்களின் எண்ணிக்கையை பொறுத்து அவர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு பிரமாண பத்திரத்தில் ‘சிறுபான்மை அந்தஸ்து வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மத்திய அரசு முரண்பாடான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளது. தெளிவான முடிவை எடுத்த பிறகே பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருக்க வேண்டும். எனவே, இவ்விவகாரம் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் கலந்தாலோசித்துவிட்டு அடுத்த 3 மாதங்களில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.