சேவை மனப்பான்மையை ஏற்போம்

தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனை சார்பில், புனேவில் உள்ள கணேஷ் கலா கிரிடா மஞ்சில் புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், ‘சகோதரி லதா மங்கேஷ்கர் துவக்கிய தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனை அவரின் சிறந்த சேவைப் பணிகளில் ஒன்று.  அவர், வாழ்க்கையின் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டவர். தனது தந்தை  நோயில் இருந்து குணமாகவில்லை. சமூகம் தன் தந்தையை போல துன்பப்படக்கூடாது என்பதற்காக, இந்த மருத்துவமனையை உருவாக்கி சேவை மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தார். அது மட்டுமில்லாமல், தாத்ரா நகர் ஹவேலியின் விடுதலைக்காக அவர் தனது துறையினருடன்  இணைந்து பல சேவைகளை செய்துள்ளார். அவர்களில் பலரைப் பற்றி நமக்குத் தெரியாது. நமது வாழ்வில் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் பல்வேறு வடிவங்களில் நம்மை வந்து சந்திக்கின்றன. அதன் வருகை நமக்கு எல்லையற்ற அமைதியை ஏற்படுத்துகிறது. அவருடைய குரல் நித்தியமானது. சகோதரி லதா மங்கேஷ்கரின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் கடைப்பிடித்த தூய்மை, நிர்வாகம், இரக்கம், சேவை மனப்பான்மை ஆகியவற்றை நாம் ஏற்றுக்கொண்டால், அது அந்த இசையின் இமயமலைக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்’ என்று கூறினார். பண்டிட் ஹிருதய்நாத் மங்கேஷ்கர், மூத்த பாடகி ஆஷா போசலே, பிரபல பாடகிகள் உஷா மங்கேஷ்கர், மீனா காதிகர், ஆதிநாத் மங்கேஷ்கர் ஆகிய மங்கேஷ்கர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வித்யா வசஸ்பதி சங்கர் அபியங்கர் விஸ்வநாத் காரட், இசை அமைப்பாளர் ரூப்குமார் ரத்தோட் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.