ஐ.ஐ.டி சென்னைக்கு சர்வதேச விருது

இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐ.ஐ.டி) சென்னையின், புதுமை கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவுக்கான கோபாலகிருஷ்ணன் தேஷ்பாண்டே மையம், ‘தொழில்நுட்ப வணிக மயமாக்கலில் சிறந்த நடைமுறை’க்கான சர்வதேச விருதை வென்றுள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்திற்கு உட்பட்ட க்ளீவ்லாந்தில் நடைபெற்ற 11வது வருடாந்திர தேஷ்பாண்டே கருத்தரங்கில் இந்த விருது வழங்கப்பட்டது. தேஷ்பாண்டே அறக்கட்டளை மற்றும் மசாசூசெட்ஸ் லோவெல் பல்கலைக்கழகம் இணைந்து 2012ம் ஆண்டு தொடங்கிய ‘உயர்க்கல்வியில் புதுமை கண்டுப்பிடிப்பு மற்றும் தொழில் முனைவுக்கான  தேஷ்பாண்டே கருத்தரங்கம்’, கல்வியாளர்கள், கொள்கை வகுப்போர் மற்றும் பயிற்சியாளர்கள் தங்களது கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் வாயிலாக தொழில் முனைவை ஒருங்கிணைப்பதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக தொடங்கப்பட்டது. சென்னை ஐ.ஐ.டியின் கோபாலகிருஷ்ணன் தேஷ்பாண்டே மையம், கருத்துரு முதல் உற்பத்தியை அதிகரிப்பது வரையிலான ஸ்டார்ட் அப் வாழ்க்கை சக்கரம் மற்றும் அதன் தேசிய எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் சிறந்து விளங்குவதாக விருது வழங்கும் குழு அறிவித்துள்ளது.