நைவேத்தியம்

சீடன் ஒருவன் தன் குருவிடம் ‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்? கடவுள் படையலை சாப்பிடுவாரா’’? என்று கேட்டான்.

குரு எதுவும் சொல்லாமல், அவனைப் பார்த்து ‘’நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். நானும் வருகிறேன்” என்றார்.

அனைத்தும் பூர்ணத்தில் இருந்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷ மந்திரத்தை விளக்கினார் குரு.

சிறிது நேரத்திற்கு பிறகு அந்த சிஷ்யனை அழைத்த குரு, “எனதருமை சீடனே, மந்திரத்தை மனதில் ஏற்றிக் கொண்டாயா? ,” என்றார்.

“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.
“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”

கண்கள் மூடி ” பூர்ண மித பூர்ண மிதம் …”  கூறி முடித்தான்.
புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்.. “எங்கே உனது புத்தகத்தை காட்டு”

சீடன், புத்தகத்தை காண்பித்து “ குருவே தவறு எனில் மன்னியுங்கள். நான் இதில் இருப்பதை போலவே கூறினேன்…” என்றான்.

“இந்த புத்தகத்தில் படித்துதான் மனதில் உள்வாங்கினாயா? அப்படியெனில், மந்திரம் இதில் இருக்கிறதே? நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்கக் கூடாதல்லவா?” என்றார் குரு.

சீடன் குழம்பினான்.

குரு தொடர்ந்தார், ‘’உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது.
புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான். நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா? அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம். ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்யத்தை உட்கொள்கிறோம்.”

தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவேத்யம் செய்து முழுமையடைந்தான் சீடன்.