குஜராத் கலவர மனு தள்ளுபடி

குஜராத்தில் உள்ள கோத்ரா எனுமிடத்தில் 2002ம் ஆண்டில் கரசேவகர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் கலவரம் ஏற்பட்டது. அப்போது குல்பர்க்கா சொசைட்டி பகுதியில் நடந்த வன்முறையில் 68 பேர் கொல்லப்பட்டனர். இந்த குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தச் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி) அமைக்கப்பட்டது. அந்த சிறப்பு விசாரணைக் குழு 2012ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில், அப்போது முதல்வராக இருந்த மோடி, காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 64 பேர் மீது எந்தவிதமான குற்றமும் இல்லை எனத் தெரிவித்தது. எஸ்.ஐ.டியின் அறிக்கையை மறு ஆய்வு செய்யக்கோரி அகமதாபாத் நீதிமன்றத்திலும், குஜராத் உயர் நீதிமன்றத்திலும் முன்னாள் எம்.பி. ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ஜாகியா ஜாப்ரி, சமூக ஆர்வலர் தீஸ்தா தல்வத் ஆகியோர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில், இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.