அம்மன் சிலை சேதம்

வேலூர் மாவட்டத்தில் காட்டம்பட்டி காங்கேயநல்லூர் மேலாண்ட தெரு புளியந்தோப்பு பகுதியில் அமைந்துள்ளது படவேட்டம்மன் கோயில். இந்த கோயிலில் உள்ள பாம்புகளுடன் கூடிய அம்மன் உருவம் பதித்த சிலையை இரவோடு இரவாக சில மர்ம நபர்கள் பெயர்த்து எடுத்து வீசியுள்ளனர். பல ஆண்டுகாலமாக இப்பகுதி மக்கள் இந்த சிலையை வழிபட்டு வருகிறார்கள். இந்த சிலை சேதப்படுத்தப்பட்டதை அறிந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு போராடினர். அந்த நபர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த விருதம்பட்டு காவல்துறையினர் இதுகுறித்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி ஊர் பொதுமக்களை சமாதானம் செய்தனர்.