தி.மு.க கவுன்சிலர் அராஜகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சுத்தமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ வின்சென்ட். இவர் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்த கிராமத்தில் அவரது மனைவி மற்றும் 2 மகள்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக அக்கிராமத்தில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில், கரும்பு பயிர் நடவு செய்து பராமரித்து வந்தனர். ரிஷிவந்தியம் ஒன்றிய தி.மு.க கவுன்சிலரான யேசு ரட்சகர் என்பவர், இவர்களுடைய 5 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்றார். தனது அடியாட்களுடன் சென்று மிரட்டி, நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்களை சட்டவிரோதமாக தனது பெயரில் பதிவு செய்து கரும்பு ஆலைக்கு அனுப்பி ரூ .5 லட்சம் வரை மோசடி செய்துள்ளார். இதைத் தட்டிக் கேட்ட ஆண்ட்ரூ வின்சென்ட்டின் மனைவி, 2 மகள்கள் மற்றும் ஆன்ட்ருவின் தம்பி மனைவி ஆகியோரை யேசு ரட்சகர் சில தினங்களுக்கு முன் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் மூங்கில் துறைபட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் யேசு ரட்சகர் மீது வழக்கு பதிவு மட்டுமே செய்துள்ளனர். அவரை கைது செய்யவில்லை. தன் மீது புகார் அளித்ததை அறிந்த திமுக கவுன்சிலரான யேசு ரட்சகர், இருதினங்களுக்கு முன் வீடு புகுந்து வீட்டில் உள்ள அனைவரையும் தாக்கியுள்ளார். பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றார். நிலத்தை தனக்கு எழுதி தருமாறு அந்த வீட்டுப் பெண்களை மிரட்டினார். தாக்குதலில் காயமடைந்தவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து புகார் அளிக்கப்பட்டபோதிலும் தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் மீது இதுவரை காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.