மஹுலி கோயில்கள் மேம்பாடு

மஹுலி குழுமக் கோயில்களின் விரிவான மேம்பாடு குறித்த அறிக்கையை கலாச்சார அமைச்சகத்திடம் தேசிய நினைவுச் சின்னங்கள் ஆணையம் சமர்ப்பிக்கவுள்ளது. புகழ்பெற்ற இந்தக் கோயில்களின் குழு – தக்ஷின் காசி என்று அழைக்கப்படுகிறது. இது 11 மற்றும் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த  ஹேமட்பந்தி கட்டிடக்கலை பாணியில் சதாராவுக்கு அருகில் கட்டப்பட்டுள்ளதாகும். தேசிய நினைவுச்சின்ன ஆணையத்தின் தலைவர் தருண் விஜய், மராட்டிய மகாராணிகளான ராணி தாராபாய் போஸ்லே மற்றும் ராணி யேஷோ பாய் போஸ்லே ஆகியோரின் சமாதிகளை மஹுலியில் (சதாரா) பார்வையிடச் சென்றார். அப்போது பேசிய அவர், ‘பாரதத்தின் சுதந்திரத்திற்கு மகாராணி தாராபாயின் பங்களிப்புடன் முகலாயர்களை முறியடிக்க அவர் மேற்கொண்ட  துணிச்சலான நடவடிக்கைகளும் மகத்தானது. வரும் தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் அவரது நினைவு பாதுகாக்கப்பட வேண்டும். மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுத்தால் இதைச் செய்ய முடியும். மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளேன். கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள ராம்டெக் மற்றும் மஹுலி கோயில்களை மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் பட்டியலில் சேர்த்து மகாராணி தாராபாய் மற்றும் யேசுபாய் சமாதிகள் தகுந்த முறையில் வளர்ச்சியடைய உதவவும் பரிந்துரையையும் செய்வேன்’ என்று கூறினார். மேலும், ராம்டெக் கோயில் குழு, அம்பாலா கேட், சிந்தூரி பவ்லி, மன்சார் புத்த ஸ்தூபி ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார்.