தொடரும் கள்ளச் சாராய மரணங்கள்

தஞ்சாவூர் கீழவாசலில் அனுமதி பெற்ற டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இதில் மது அருந்திய மீன் வியாபாரியான குப்புசாமி மற்றும் கார் ஒட்டுநர் குட்டி விவேக் ஆகியோர் உயிரிழந்தனர். டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள அரசு அனுமதி பெற்ற பாரில், அனுமதி நேரத்திற்கு முன்பாக கள்ளச் சந்தையில் மதுபானம் வாங்கி அருந்திய இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பார் உரிமையாளரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். இதையடுத்து, ஆட்சியர் உத்தரவின்பேரில், சட்டவிரோதமாக மதுபானம் விற்ற பாருக்கு வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் சீல் வைத்தனர். அதற்கு எதிரே உள்ள டாஸ்மாக் கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இறந்த இருவரது உடல்களிலும் தடய அறிவியல் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த முதற்கட்ட ஆய்வறிக்கையில் மெத்தனால் ஆல்கஹால் இல்லை என்பதும் சயனைடு விஷம் இருந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில், மதுக் கடை திறப்பதற்கு முன்னரே, கள்ளச் சந்தையில் விற்கப்பட்ட மது வாங்கிக் குடித்த குப்புசாமி என்ற முதியவர் மரணமடைந்துள்ளார். மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் மரணித்துவிட்டார் என்ற செய்தி வந்துள்ளது. கள்ளச் சாராயத்தைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் போலி மதுபானங்களால் மரணங்கள் தொடர்கின்றன. இந்த போலி மதுபானத்தை உற்பத்தி செய்த ஆலையின் உரிமையாளர், டாஸ்மாக் நிர்வாகத்தினர் மற்றும் இந்தத் துறையின் அமைச்சரான செந்தில் பாலாஜி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள மதுக் கடையின் முன்பு தமிழக பா.ஜ.க தொண்டர்களுடன் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதே கோரிக்கையை முன்வைத்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பு போராட்டம் நடைபெற வேண்டுமா என்பதை ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாது, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தமிழக பா.ஜ.க சார்பாக வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.