காங்கிரஸ் அறிக்கைக்கு கண்டனம்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தளம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகியவற்றை தடை செய்வோம் என தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டு உள்ள தேர்தல் அறிக்கையில், சட்டம் மற்றும் அரசியல் சாசனம் புனிதம் வாய்ந்தது என நாங்கள் நம்புகிறோம். அதனை, தனி நபர்கள் அல்லது பஜ்ரங் தளம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் பிற அமைப்புகள், பெரும்பான்மையினர் அல்லது சிறுபான்மையினர் இடையே பகைமையையோ அல்லது வெறுப்புணர்வையோ ஊக்குவித்து மீறுதல் கூடாது. ஜாதி மற்றும் மத ரீதியாக சமூகத்திற்கு எதிராக வெறுப்புணர்வை பரப்பக்கூடிய தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது காங்கிரஸ் கட்சி உறுதியான மற்றும் தீர்க்கமான முடிவை எடுக்கும். எந்தவொரு அமைப்பின் மீதும் சட்டத்தின்படி, தடை விதிப்பது உள்ளிட்ட முடிவுகளை நாங்கள் எடுப்போம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை கண்டித்துள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த சுரேந்திரா ஜெயின், “பஜ்ரங் தள அமைப்பை, தேச விரோத மற்றும் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் காங்கிரஸ் கட்சி ஒப்பிட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. நாட்டு மக்கள் இதனை ஏற்கமாட்டார்கள். இந்த சவாலை பஜ்ரங்தளம் ஏற்கிறது. அனைத்து ஜனநாயக வழிகளிலும் இதற்கு நாங்கள் பதிலளிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.